வானிலை முன்னறிவிப்பு: சென்னை, புறநகரில் மிதமான மழை வாய்ப்பு

சென்னை: சென்னை மற்றும் புறநகரின் சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் வெள்ளிக்கிழமை இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல,வரும் 10-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும், 11-ம் தேதி சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை.

தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் 12 செ.மீ., திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் 6 செ.மீ., ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம், திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர், திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஆகிய இடங்களில் 5 செ.மீ., திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, சென்னை ஆலந்தூர் ஆகிய இடங்களில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.