மருத்துவப் படிப்பு: ரூ.70,000-க்கு சான்றிதழ் விற்பனை; 1630 பேர் பதிவு… 14 போலி டாக்டர்கள் கைது!

குஜராத்தில் சமீபத்தில் போலி கோர்ட் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதுவும் அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்ட கோர்ட்டிற்குள் போலி கோர்ட் செயல்பட்டது பெரும் அதிர்ச்சியை கிளப்பியது. இது தவிர போலி அரசு அலுவலகமும் குஜராத்தில் பிடிபட்டது. அதனைத் தொடர்ந்து, இப்போது போலி டாக்டர் பட்டப்படிப்பு சான்று மோசடி வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

ஒரு கும்பல் போலி மருத்துவ போர்டு ஒன்றை சொந்தமாக நடத்தி வந்துள்ளனர். வைரத்தொழிலுக்கு புகழ்பெற்ற சூரத்தில் போலி டாக்டர்கள் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. உடனே, சம்பந்தப்பட்ட மூன்று கிளினிக்களில் போலீஸார் ரெய்டு நடத்தினர். இதில் மூன்று பேரும் பி.இ.எச்.எம். மருத்துவ படிப்புக்கான பட்டப்படிப்பு சான்றிதழை போலீஸாரிடம் காட்டினர். ஆனால் அது போன்ற ஒரு படிப்பு குஜராத்தில் கிடையாது. அந்த சான்றிதழ் போலி என்று தெரிய வந்தது.

கைது செய்யப்பட்ட போலி டாக்டர்கள்

இதையடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் அந்த மருத்துவ படிப்புக்கான சான்றிதழை ரூ.70 ஆயிரம் கொடுத்து வாங்கி இருப்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து, அவர்களுக்கு மருத்துவ படிப்புக்கான சான்றிதழை விற்பனை செய்த முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

டாக்டர் ராவத் மற்றும் ராசேஷ் குஜராத்தி ஆகியோர் சேர்ந்து இந்த போலி மருத்துவ பட்டப்படிப்பு சான்றிதழ்களை விற்பனை செய்து வந்துள்ளனர். இதில் ராவத் ஆயுர்வேத மருத்துவத்தில் பட்டப்படிப்பு படித்தவர். ராசேஷ் ஹோமியோபதியில் டிப்ளமோ படித்தவர்.

எலக்ட்ரோ ஹோமியோபதி படிப்புக்கு எந்த வித கட்டுப்பாடோ அல்லது விதிகளோ இல்லை என்பதை தெரிந்து கொண்டு அவர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

ராசேஷ் குஜராத்தி அகமதாபாத்தில் எலக்ட்ரோ ஹோமியோபதி போர்டு என்று ஒன்றை தனியாக தொடங்கி அதன் மூலம் இந்த போலி சான்றிதழ்களை ரூ.70 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரை பெற்றுக்கொண்டு வினியோகம் செய்து வந்தார். போலீஸார் ராவத் மற்றும் ராசேஷ் இல்லம் மற்றும் அலுவலத்தில் ரெய்டு நடத்தியதில் நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள், காலி பட்டப்படிப்பு சான்றிதழ் என ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் சான்றிதழ்களை விற்பனை செய்தவர்கள் பதிவு செய்து கொள்ள சொந்தமாக ஒரு இணையத்தளமும் வைத்திருந்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள்

அதில் பட்டப்படிப்பு சான்றிதழ் பெற்ற 1630 பேர் பதிவு செய்துள்ளனர். இவர்கள் கடந்த 20 ஆண்டுகளாக இந்த போலி சான்றிதழ் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஆனாலும் போலீஸாருக்கு இது குறித்து தெரியாமல் இருந்து வந்துள்ளது. அவர்களிடம் விசாரணை நடத்தி மாநிலம் முழுவதும் 14 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர். இக்கும்பல் பணத்தை பெற்றுக்கொண்டு வெறும் 15 நாளில் மருத்துவ படிப்புக்கான சான்றிதழை கொடுத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.