இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடர் நடைப்பெற்று வருகிறது.
இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனில் இருக்கிறது. தற்போது மூன்றாவது போட்டி பிரிஸ்பேனில் நடைப்பெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 445 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் வழக்கம் போல முன்வரிசை வீரர்கள் சொதப்பினர்.

இதில் விராட் கோலி ஆடிய ஆட்டம் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் விராட் கோலிக்கு அறிவுரை வழங்கி இருக்கிறார். “இந்தத் தொடரில் 5 இன்னிங்ஸில் அவர் 4 முறை இதே போல அவுட்டாகியுள்ளார். அது 2014ஆம் ஆண்டு இங்கிலாந்தில் அவர் தடுமாறியதை எனக்கு நினைவூட்டுகிறது. அவர் நன்றாக விளையாடியிருந்தால் இந்தியா இன்னும் நல்ல நிலையில் இருந்திருக்கும்.
இப்போதாவது சச்சின் டெண்டுல்கரின் அணுகுமுறையை விராட் கோலி எடுத்துக் கொள்ள வேண்டும். சச்சின் ஆஃப் சைட் திசையில் கவர் ட்ரைவ் அடிக்காமலேயே 2004 சிட்னி போட்டியில் 241 ரன்களை குவித்தார். எனவே சச்சின் டெண்டுல்கரை ஹீரோவாக நினைக்கும் விராட் கோலி அவருடைய பாதையை பின்பற்ற வேண்டும்.

அடுத்த 2 போட்டிகளில் அது அவருக்கு கைக்கொடுக்கும். டெஸ்ட் பேட்டிங் என்பது ரன்கள் அடிப்பதை சார்ந்தது மட்டும் கிடையாது. களத்தில் நிலைத்து நின்று விளையாடுவதாகும். அதை செய்தாலே ரன்கள் தாமாக வரும்” என்று கூறியிருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…
https://bit.ly/MadrasNallaMadras
