வங்காளதேசத்தில் வாக்களிக்கும் வயதை குறைக்க எதிர்க்கட்சி கடும் எதிர்ப்பு

டாக்கா

வங்காளதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் அவர் இந்தியாவுக்கு தப்பி வந்தார். 16 ஆண்டுகளாக பதவியில் இருந்த அவர் தற்போது இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.

தற்போது பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவியில் உள்ளது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முகமது யூனுஸ் தேர்தலில் வாக்களிக்கும் வயதை 17 ஆக குறைக்க வேண்டும் என கருத்து தெரிவித்தார். தற்போது வாக்களிக்கும் வயது 18-ஆக உள்ளது.

முகமது யூனுசின் முடிவுக்கு கலீதா ஜியா தலைமையிலான வங்காளதேச தேசியவாத கட்சி (பி.என்.பி) எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக முக்கிய எதிர்க்கட்சியான பி.என்.பி.யின் பொதுச்செயலாளர் ஆலம்கீர் கூறியதாவது:-

“யூனுசின் திட்டத்தை அமல்படுத்தினால் புதிய வாக்காளர்கள் பட்டியலை தயாரிக்க வேண்டும். தேர்தலை தாமதப்படுத்தவே இடைக்கால அரசு விரும்புகிறது. வாக்களிக்க குறைந்தபட்ச வயது 18 என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது.நீங்கள் அதை ஒரு வருடம் குறைக்க விரும்பினால், தேர்தல் ஆணையம் அதை முன்மொழிந்து அரசியல் கட்சிகளுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும். இதனால் தேர்தல் நடத்துவது மேலும் தாமதம் ஆகலாம்.” இவ்வாறு ஆலம்மிர் கூறினார்.

வங்காளதேசத்தில் அடுத்த ஆண்டு (2025) இறுதியில் அல்லது 2026 தொடக்கத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று முகமது யூனுஸ் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.