இஸ்ரேலிய பணய கைதிகளில் மேலும் 3 பேரை விடுதலை செய்த ஹமாஸ் ஆயுதக்குழு

காசா முனை,

இஸ்ரேல், காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழு இடையே ஓராண்டுக்கு மேல் நீடித்து வந்த போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, போர் ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் தங்கள் வசம் உள்ள இஸ்ரேலிய பணய கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டது. பணய கைதிகளுக்கு ஈடாக இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனிய கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டுள்ளது.

அதன்படி, முதற்கட்டமாக ஹமாஸ் தங்கள் பிடியில் உள்ள இஸ்ரேலிய பணய கைதிகளில் 33 பேரை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டது. இதற்கு ஈடாக தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனிய கைதிகளில் 1,904 பேரை விடுதலை செய்ய இஸ்ரேல் ஒப்புக்கொண்டது. அதன்படி, தற்போதுவரை ஹமாஸ் ஆயுதக்குழு தங்கள் பிடியில் இருந்த இஸ்ரேலியர்களில் 10 பேரை விடுதலை செய்துள்ளது. அதற்கு ஈடாக பாலஸ்தீனியர்கள் 300க்கும் மேற்பட்டோரை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது.

இந்நிலையில், ஹமாஸ் ஆயுதக்குழு தங்கள் பிடியில் உள்ள இஸ்ரேலிய பணய கைதிகளில் மேலும் 3 பேரை இன்று விடுதலை செய்தனர். அதன்படி, ஆபர் கல்டரோன் (வயது 54), யர்டன் பிபஸ் (வயது 35) மற்றும் கீத் சிஜல் (வயது 65) ஆகிய 3 பேரை ஹமாஸ் ஆயுதக்குழு இன்றே விடுதலை செய்துள்ளது. இதற்கு ஈடாக தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனியர்களில் 183 பேரை இஸ்ரேல் இன்று விடுதலை செய்ய உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.