வங்கதேசம் உள்பட அண்டை நாடுகளுக்கு இந்தியா அளிக்கும் நிதி எவ்வளவு? வெளியான தகவல்

புதுடெல்லி,

2025-26ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் மத்திய வெளியுறவுத்துறைக்கு மொத்தம் ரூ.20,516 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் ரூ.5,483 கோடி என்பது பிற நாடுகளுக்கு உதவிடும் வகையில் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வெளிநாடுகளுக்கு உதவி செய்ய மத்திய அரசு சார்பில் ரூ.5,806 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த முறை அந்த தொகை என்பது சற்று குறைக்கப்பட்டுள்ளது. மேலும் எந்தெந்த நாடுகளுக்கு எவ்வளவு தொகை ஒதுக்கீடு செய்ய திட்டமிட்டுள்ளது என்பது பற்றிய விபரத்தை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி அண்டை நாடான பூடானுக்கு தான் அதிக தொகை வழங்கப்பட்டுள்ளது. 2025-26ம் நிதியாண்டில் பூடானுக்கு இந்தியா சார்பில் ரூ.2,150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.2,543 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த முறை குறைக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் நேபாளம் 2வது இடத்தில் உள்ளது. அந்த நாட்டுக்கு இந்தியா ரூ.700 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.

கடந்த நிதி ஆண்டில் மாலத்தீவுக்கு ரூ.470 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ரூ.600 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 4வது இடத்தில் இலங்கை உள்ளது. இலங்கைக்கு, மத்திய வெளியுறவுத்துறை சார்பில் ரூ.300 கோடி நிதி என்பது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 4வது இடத்தில் வங்கதேசம் உள்ளது. கடந்த ஆண்டு வங்கதேசத்துக்கு ரூ.120 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த முறையும் அதேபோல் ரூ.120 கோடி வழங்கப்பட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.