புதுடெல்லி,
இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டை மேம்படுத்தும் விதமாக மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை பி.சி.சி.ஐ 2023-ம் ஆண்டு தொடங்கியது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இதுவரை இரண்டு சீசன்களை கடந்துள்ள இத்தொடரானது 3-வது சீசனை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது. இதில் முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியும், 2-வது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.
இதனையடுத்து மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3-வது சீசன் வரும் 14-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அதன்படி இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இந்நிலையில் வரவிருக்கும் மகளிர் பிரீமியர் லீக்குக்கு முன்னதாக உ.பி. வாரியர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ அணிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அதன்படி உ.பி. வாரியர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த அலிசா ஹீலி நடப்பு மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கான மாற்று வீராங்கனையாக வெஸ்ட் இண்டீஸின் நட்சத்திர ஆல் ரவுண்டர் சினெல்லா ஹென்றி உ.பி. வாரியர்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதேபோல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் சோபி டிவைன் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் கேட் கிராஸ் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களைக் கூறி இத்தொடரில் இருந்து விலகி உள்ளனர். இதனையடுத்து அவர்களுக்கான மாற்று வீராங்கனைகளாக ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த ஹீதர் கிரஹாம் மற்றும் கிம் கார்த் ஆகியோரை ஆர்.சி.பி அணி ஒப்பந்தம் செய்துள்ளது.