மெக்சிகோ மீதான 25% வரிவிதிப்பு தற்காலிக நிறுத்தம்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: மெக்சிகோ மீதான 25 சதவீத வரிவிதிப்பை ஒருமாத காலம் தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மெக்சிகோ மற்றும் கனடாவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 25 சதவீதமும், சீனா பொருள்களுக்கு 10 சதவீதமும் வரி விதிப்பு பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று ட்ரம்ப் தெரிவித்திருந்தார். மெக்சிகோவும் கனடாவும் புலம்பெயர்வு மற்றும் ஃபெண்டனில் கடத்தலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை இந்த நடவடிக்கைத் தொடரும் என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். இதே போல மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் அமெரிக்காவின் வரிவிதிப்புகளுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் உடன் தொலைபேசி வாயிலாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் தனது சமூக வலைதள பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள அவர், “அமெரிக்க – மெக்சிகோ எல்லையில் உடனடியாக 10,000 ராணுவ வீரர்களை நிறுத்துவதற்கு கிளாடியா ஒப்புக் கொண்டுள்ளார். இந்த வீரர்கள் எங்கள் நாட்டில் சட்டவிரோதமாக நுழையும் குடியேறிகளை தடுத்து நிறுத்துவார்கள். மேலும் 25 சதவீத வரிவிதிப்பை தற்காலிகமாக ஒரு மாதகாலம் நிறுத்திவைப்பது என்ற முடிவுக்கு நாங்கள் வந்துள்ளோம். இரு நாடுகளுக்கும் இடையே ஒரு ‘ஒப்பந்தம்’ நிறைவேறும் வரையில் பேச்சுவார்த்தை தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கிளாடியா ஷீன்பாம் தனது எக்ஸ் பக்கத்தில், “எங்கள் குழுக்கள் பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் ஆகிய இரண்டு துறைகளில் செயல்படத் தொடங்கும்” என்று தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.