மதுரை: திருப்பரங்குன்றம் கோயிலுக்குள் தடையை மீறிப் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி, பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையில், ஆர்ப்பாட்டம் நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்ததால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு மலையைப் பாதுகாக்க வலியுறுத்தி கோஷமெழுப்பினர். போராட்டத்தையொட்டி மாவட்டம் முழுவதும் 4 ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
திருப்பரங்குன்றம் மலை மீதுகாசி விசுவநாதர் கோயில், சிக்கந்தர் பாதுஷா தர்கா பள்ளிவாசல் உள்ளது. இந்நிலையில், சிக்கந்தர் தர்காவில் சந்தனக்கூடு திருவிழாவையொட்டி இஸ்லாமிய அமைப்பினர் சிலர் கந்தூரி கொடுக்க ஆடு, கோழிகளைப் பலியிட முயன்றனர். இதற்கு பாஜக, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் எதிர்ப்புத் தெரிவித்து, ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், ராமநாதபுரம் எம்.பி.நவாஸ்கனி உள்ளிட்டோர் தர்காவுக்குச் சென்றனர். அப்போது நவாஸ்கனியுடன் வந்தவர்கள் மலைப்படிக்கட்டுகளில் அமர்ந்து அசைவ உணவு சாப்பிட்டதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலையைப் பாதுகாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இந்து அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன. தமிழகம் முழுவதுமிருந்து இந்து முன்னணி, பாஜகவினர் திரள திட்டமிட்டிருந்த நிலையில், இதற்கு போலீஸ் அனுமதி மறுத்துவிட்டது. மேலும், மதுரை மாவட்ட நிர்வாகம் பிப். 3, 4 ஆகிய 2 நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பித்தது. வெளியூர்க்காரர்கள் திரள்வதை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டன. மேலும், 4 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
திருப்பரங்குன்றம் பிரதான நுழைவுப்பகுதி, சந்நிதி தெரு, மலையைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. கோயிலுக்கு பக்தர்கள் மட்டும் நடந்துசெல்ல அனுமதிக்கப்பட்டனர். மலைக்குச் செல்லும் வழிகளும் முற்றிலும் மூடப்பட்டன. அங்குள்ள கடைகள், ஹோட்டல்கள் அடைக்கப்பட்டிருந்தன. பள்ளிகள் செயல்படவில்லை. இதனால், கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
மாநிலம் முழுவதும்… போராட்டத்தைக் கட்டுப்படுத்த தென் மாவட்டங்களில் 1,633 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், தமிழகம் முழுவதிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்து முன்னணி, பாஜகவினர் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு, வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர். திருப்பூரில் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், அவரது அலுவலகத்தில் இருந்து தொண்டர்களுடன் கையில் வேலுடன் புறப்பட்டபோது கைது செய்யப்பட்டார். அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “இரவோடு இரவாக பலர் கைது செய்யப்பட்ட நிலையில், போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. 2026 தேர்தலில் திமுகவுக்கு தோல்வியே கிடைக்கும். இதுவே இந்து சமூகத்தினர் திமுகவுக்கு தரும் பரிசு” என்றார்.
மேலும், ரயில், பேருந்து மார்க்கமாக ஆர்ப்பாட்டக்காரர்கள் வருவதை தடுக்கும் வகையில் மதுரை, திருப்பரங்குன்றம் ரயில் நிலையங்களில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். கோயிலுக்குள் பக்தர்கள் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், போலீஸாரின் பாதுகாப்பு வளையத்தையும் மீறி, பக்தர்கள் போர்வையில் கோயிலுக்குள் சென்ற இந்து முன்னணி, பாஜகவினர், சஷ்டி மண்டபத்தை ஒட்டியுள்ள அன்னதான கூடம் பகுதியில் திரண்டனர்.
போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி, இங்கு ஏன் கூட்டமாக இருக்கிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு, அன்னதானம் சாப்பிடுவதற்காகக் காத்திருப்பதாக அவர்கள் கூறினர். பின்னர் அவர்கள் ஒன்றுகூடி ‘திருப்பரங்குன்றம் மலை கந்தர் மலை, கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா’ என முழக்கமிட்டனர். இதனால், போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த போலீஸார் முயன்றனர். அவர்கள் வெளியேற மறுத்ததால், குண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்றினர். கோயில் நடை ஒரு மணியளவில் சாத்தப்பட்டு, கோயில் முன்புற கேட் பூட்டப்பட்டது. அப்போது கோயில் முன் திரண்டிருந்த இந்து முன்னணி அமைப்பினர் மீண்டும் முழக்கங்களை எழுப்பினர்.
மாவட்டம் முழுவதும் பதற்றம்: அவ்வப்போது 100 பேர், 200 பேர் கூடியபடி கோயிலைப் பாதுகாக்க வேண்டுமென முழக்கங்கள் எழுப்புவதும், அவர்களை போலீஸார் கைது செய்வதும் தொடர்ந்தது. இந்தப் போராட்டத்தால் மதுரை மாவட்டம் முழுவதும் பதற்றம் நிலவியது. எந்தப் பகுதியிலிருந்து, யார் வருகிறார்கள் என்பதைக் கண்காணிக்க முடியாமல் போலீஸார் திணறும் அளவுக்கு பக்தர்கள் போராட்டத்தில் உணர்ச்சி பெருக்குடன் பங்கேற்று, தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
உயர் நீதிமன்றம் அதிரடி: திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி இந்து முன்னணி சார்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர். அதேபோல, அனுமதி வழங்க ஆட்சேபம் தெரிவித்தும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், பூர்ணிமா அமர்வு, பழங்காநத்தத்தில் ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது” என்று உத்தரவிட்டனர்.
இதையடுத்து, கோயில் முன் திரண்டிருந்த ஏராளமான இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர் உயர் நீதிமன்றத்தின் அனுமதியை வரவேற்று முழக்கங்களை எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து, அவர்களை பழங்காநத்தம் செல்லுமாறு போலீஸார் அறிவுறுத்தினர். மாலையில் அங்கு நடந்த ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு, திருப்பரங்குன்றம் மலையைப் பாதுகாக்கக் கோரி கோஷமெழுப்பினர். இதில், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, ஆர்எஸ்எஸ் தென்பிராந்திய தலைவர் வன்னிராஜன், இந்து முன்னணி மாநிலச் செயலாளர் ராஜேஷ் உள்ளிட்டோர் பேசினர்.
ஒரு மணி நேரத்தில் குவிந்த கூட்டம்: நீதிமன்றம் அனுமதி அளித்த ஒரு மணி நேரத்திற்குள் பல்லாயிரம் பேர் ஆர்ப்பாட்ட திடலில் குவிந்தனர். இது போலீஸார் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினருக்கும் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் உணர்ச்சிமிகுதியில் பலத்த எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினர். எனினும், நீதிமன்ற உத்தரவிற்கு கட்டுப்பட்டு, எவ்வித அசம்பாவிதம், விதிமீறலில் ஈடுபடாமல் கட்டுக்கோப்புடன் போராட்டத்தை நிறைவு செய்ததும் குறிப்பிடத்தக்கது.
என்.சன்னாசி/ சுப.ஜனநாயக செல்வம்