ஸ்வீடனில் நடந்த பயங்கர துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஸ்வீடனில், ஸ்டாக்ஹோமில் இருந்து சுமார் 200 கி.மீ தொலையில் உள்ள ஓரேப்ரோ என்னும் இடத்தில் ரிஸ்பெர்க்ஸ்கா ஸ்கூல் என்ற கல்வி நிறுவனம் உள்ளது. பள்ளிக் கல்வியை முறையாக முடிக்காத மாணவர்களை உயர்கல்விக்கு தயார்படுத்துகிறது இப்பள்ளி.
இந்த பள்ளியில் செவ்வாய்க்கிழமை நுழைந்த மர்மநபர் ஒருவர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். இதில் 10 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் உயிரிழந்தவர்களில் தாக்குதல் நடத்திய நபரும் இருக்கலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். எனினும் தாக்குதல் நடத்தியவர் யார், அவரின் நோக்கம் என்ன? ஆகியவை குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தனிநபர் நடத்திய தாக்குதலாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம் என்றும், இது தீவிரவாத தாக்குதல் அல்ல என்றும் போலீஸார் கூறுகின்றனர். இது ஸ்வீடன் வரலாற்றிலேயே மிக மோசமான தாக்குதல் என்று கூறப்படுகிறது. நாட்டுக்கு இது மிகவும் வலிமிகுந்த நாள் அன்று ஸ்வீடன் பிரதமர் உல்ஃப் க்ரிஸ்டர்ஸ்ஸன் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இறந்தவர்களில் மாணவர்கள் எத்தனை பேர், ஆசிரியர்கள் எத்தனை பேர் என்பது குறித்த தகவல்களை ஸ்வீடன் போலீஸார் இன்னும் வெளியிடவில்லை.