சாம்பியன்ஸ் டிராபி தொடர் இன்னும் இரண்டு வாரங்களில் தொடங்க உள்ளது, ஆனால் இந்த தொடரில் விளையாட போகும் இந்திய அணி குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. கடந்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஆனால் அவற்றில் கடைசி நிமிடம் மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்பராவின் காயம் தான். முதலில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் கடைசி போட்டியில் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் நேற்று அறிவிக்கப்பட்ட அணியில் பும்பராவின் பெயர் இல்லை. மேலும் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவதும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்திய அணியில் பும்ரா இடம்பெறாததால் ஒட்டுமொத்த அணிலும் மாற்றம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பும்ரா சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்க மாட்டார் என்று பிசிசிஐ இன்னும் உறுதியாக தெரிவிக்கவில்லை.
பும்ராவிற்கு என்ன ஆனது?
பும்ராவிற்கு முதுகு பகுதியில் வலி ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கடைசி டெஸ்டின் போது இந்த காயம் அதிகமானது. இதனால் கடைசி இன்னிங்சில் அவர் பந்து வீசவில்லை, உடனடியாக பிசிசிஐ மருத்துவ குழு அவருக்கு முதலுதவி அளித்தனர். ஏற்கனவே ஆபரேஷன் செய்த இடத்தில் தற்போது வலி வந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பும்ரா மறுவாழ்வு பெற்று வருகிறார்.
இந்த காயம் எப்போது குணமாகும் என்பது குறித்து சரியாக தெரியவில்லை என்றும், இதனால் சாம்பியன்ஸ் டிராபியில் பும்ரா விளையாடுவது கடைசி நேரத்தில் தான் முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. பிசிசிஐயின் மருத்துவ குழு பும்ராவை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், உடனடியாக தகவல்கள் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு தெரிவிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்திய அணியின் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் பும்ராவிற்கு குறைந்தது 5 வாரங்கள் ஆவது ஓய்வு தேவை என்று கடந்த மாதம் தெரிவித்து இருந்தார்.
இங்கிலாந்து தொடரிலிருந்து நீக்கப்பட்ட பும்ரா!
பும்ரா விரைவில் குணமடைந்து வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் வருண் சக்கரவர்த்தி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சாம்பியன்ஸ் டிராபியிலும் பும்ப்ராவுக்கு பதில் வரும் சேர்க்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. பும்ராவின் காயம் குறித்து பிசிசிஐ மௌனம் காப்பது தான் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. ஐசிசி விதிகளின்படி சாம்பியன்ஸ் டிராபிக்காண அணியை மாற்றுவதற்கு இன்னும் சிறிது நாட்களே உள்ளது, அதனால் அதற்குள் முடிவுகளை எடுத்தாக வேண்டும்.
சாம்பியன் பும்ரா!
கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணிக்கு முக்கிய வீரராக பும்ரா இருந்து வருகிறார். இதனால் சாம்பியன்ஸ் டிராபியை வெற்றி பெற அவர் கண்டிப்பாக தேவை. பும்ரா பந்து வீச வந்தாலே எதிரணி வீரர்கள் விக்கெட்களை கொடுத்துவிட்டு செல்கின்றனர். தற்போது இங்கிலாந்து தொடரில் முகமது ஷமி, ஹர்ஷித் ராணா மற்றும் ஹர்ஸ்தீப் சிங் ஆகியோர் வேகப்பந்துவீச்சாளர்களாக இடம் பெற்றுள்ளனர். ஹர்ஷித் ராணா மற்றும் ஹர்ஸ்தீப் சிங் ஆகியோருக்கு பெரிதாக ஒரு நாள் தொடர்களை விளையாடிய அனுபவம் இல்லை. மேலும் முகமது ஷமி தற்போது தான் காயத்திலிருந்து மீண்டும் அணிக்கு வந்துள்ளார். இதனால் இவர்களை வைத்துக்கொண்டு சாம்பியன்ஸ் டிராபிக்கு செல்வது மிகப்பெரிய ஆபத்தாக அமையலாம்.