ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்குப்பதிவு
ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவையொட்டி, அந்த தொகுதிக்கான இடைத் தேர்தல் இன்று (பிப்ரவரி 5) நடைபெற்றது. திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி உள்பட 46 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 2.25 லட்சம் வாக்காளர்கள் உள்ள இந்தத் தொகுதியில் 237 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு காலை 7 மணி அளவில் வாக்குப் பதிவு நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப் பதிவில் காலை 9 மணி நிலவரப்படி 10.95 சதவீத வாக்குகளும், 11 மணி நிலவரப்படி 26.03 சதவீத வாக்குகளும், பிற்பகல் 1 மணி நிலவரப்படி 42.41 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தன.
அதிகமான வெப்பம் காரணமாக பிற்பகலுக்குப் பின் வாக்குப் பதிவில் சற்று மந்தநிலை காணப்பட்டது. 3 மணி நிலவரப்படி, 53.63 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், அடுத்த 2 மணி நேரத்தில் மீண்டும் வாக்குப் பதிவு சூடுபிடிக்கத் தொடங்கியது. மாலை 5 மணி நிலவரப்படி 64.02 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டன.
மாலை 6 மணிக்குள் வாக்குச் சாவடிக்குள் வரும் வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, அதன்பின் அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, ஒருசில வாக்குச் சாவடிகளில் மாலை 6 மணிக்குள் வாக்குச் சாவடிக்குள் வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
`கள்ள ஓட்டு’ -மோதல்…
ஈரோடு கிழக்குத் தொகுதி மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் உள்ள 168-ஆவது பூத்தில் பரிதாபேகம் என்பவர் தனது கணவருடன் வாக்கு செலுத்த வந்தார். நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களிக்கும் அறைக்குள் சென்று ஆவணங்களைச் சரிபார்த்தபோது அவரது வாக்கு ஏற்கெனவே செலுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், அதிர்ச்சியடைந்த பரிதாபேகம் வாக்குச்சாவடி அலுவலர்களிடம் முறையிட்டுள்ளார். இருப்பினும் அவரது வாக்கை செலுத்த முடியாது என்பதால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார். 42-வார்டில் திமுகவினர் கள்ள ஓட்டு செலுத்துவதாக தகவல் கிடைத்து அங்கு சென்று அதே வார்டைச் சேர்ந்த அதிமுக வார்டு செயலாளரான வீரா செந்தில், கள்ள ஓட்டு செலுத்திய திண்டுக்கல்லைச் சேர்ந்த திமுக நிர்வாகி ஒருவரைப் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தார். இதுதொடர்பாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
கள்ள ஓட்டுப் போடுவதாக கூறப்பட்டதால் மோதல்
அதேபோல், வீரப்பன்சத்திரம் பிரதான சாலையில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் திமுகவினர் கள்ள ஓட்டுப் போடுவதாக கூறி, நாம் தமிழர் கட்சியின் வாக்குச் சாவடி முகவர்கள், சுயேச்சை வேட்பாளர் லோகநாதன் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, அங்கிருந்த திமுகவினருக்கும், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் இருவர் மற்றும் சுயேச்சை வேட்பாளர் லோகநாதனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், நாம் தமிழர் கட்சி முகவர்கள், சுயேச்சை வேட்பாளர் லோகநாதன் தாக்கப்பட்டனர். இதையடுத்து அங்கு வந்த போலீஸார் நாம் தமிழர் கட்சியின் வாக்குச் சாவடி முகவர்கள், சுயேச்சை வேட்பாளர் லோகநாதன் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இதையடுத்து அந்த வாக்குச் சாவடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
தேர்தல் அலுவலர் விளக்கம்
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்டத் தேர்தல் அலுவலர் ராஜ்கோபால் சுன்காரா, “வாக்குப் பெட்டிகள் அனைத்தும் சித்தோட்டில் உள்ள அரசுக் கல்லூரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. கள்ள ஓட்டுப் போடப்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. ஏனென்றால் வாக்குப் பதிவு ஒவ்வொரு வேட்பாளர்களின் முகவர்களின் முன்னிலையில் நடைபெறுகிறது. எந்த ஆதாரத்தை வைத்து வாக்களிக்கிறார்கள் என்பது 17ஏ பதிவேட்டில் விரிவாக எழுதப்படுகிறது. எல்லோருக்கும் கையில் மையும் வைக்கப்படுகிறது. 14 இடங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் சிறிய கோளாறு ஏற்பட்டது. அது உடனடியாக சரி செய்யப்பட்டது.” என்றார்.