வாஷிங்டன்: காசா பகுதியை கைப்பற்றி, அமெரிக்கா அதை சொந்தமாக்கிக் கொள்ளும் என்று அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்புக்கு சீனா, சவுதி அரேபியா, துருக்கி ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அறிவிப்புக்கு பதில் அளித்துள்ள சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சகம், “பாலஸ்தீனியர்களை அவர்களின் நிலத்திலிருந்து வெளியேற்றும் எந்தவொரு முயற்சியையும் நாங்கள் நிராகரிக்கிறோம். பாலஸ்தீன அரசை நிறுவாமல் இஸ்ரேலுடன் உறவுகளை ஏற்படுத்த மாட்டோம். பாலஸ்தீன அரசு குறித்த சவூதி அரேபியாவின் நிலைப்பாடு உறுதியானது மற்றும் அசைக்க முடியாதது.
பாலஸ்தீன மக்களை இடம்பெயர வைக்கும் முயற்சிகள் மூலம், பாலஸ்தீன மக்களின் சட்டபூர்வமான உரிமைகள் மீறப்படுமானால் அதனை சவுதி அரேபியா சந்தேகத்துக்கு இடமின்றி நிராகரிக்கிறது. சவூதி அரேபியாவின் இந்த நிலைப்பாடு பேச்சுவார்த்தைகளுக்கோ, சமரசங்களுக்கோ உட்பட்டது அல்ல” என்று தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனியர்களை கட்டாய இடமாற்றம் செய்யும் முயற்சியை எதிர்ப்பதாக சீனா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், “இரு நாடுகள் தீர்வின் அடிப்படையில் பாலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். இதை கருத்தில் கொண்டு அனைத்து தரப்பினரும் போர் நிறுத்தம் மற்றும் மோதலுக்குப் பிந்தைய நிர்வாகத்தை எடுத்துக் கொள்வார்கள் என்று சீனா நம்புகிறது” என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
காசாவை கையகப்படுத்துவது குறித்த ட்ரம்ப்பின் கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று துருக்கி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கன் ஃபிடன், “பாலஸ்தீனியர்களை அவர்களது சொந்த மண்ணில் இருந்து விலக்கி வைக்கும் எந்தவொரு திட்டமும் மேலும் மோதலுக்கு வழிவகுக்கும். பாலஸ்தீனியர்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட்டு அவர்களின் நிலைமைகள் மாறினால், வர்த்தகத்தை துண்டித்தல், தூதரை திரும்பப் பெறுதல் என இஸ்ரேலுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகளை துருக்கி மறுபரிசீலனை செய்யும்” என குறிப்பிட்டார்.
“ட்ரம்பின் காசா திட்டம் சர்வதேச குற்றத்தின் கீழ் வரும். இது சட்டவிரோதமானது, ஒழுக்கக்கேடானது மற்றும் முற்றிலும் பொறுப்பற்றது. அதோடு, ட்ரம்ப் கூறி இருப்பது முட்டாள்தனமானது. கட்டாய இடப்பெயர்வுக்கு தூண்டுவது ஒரு சர்வதேச குற்றம். சர்வதேச சமூகம் 193 நாடுகளால் ஆனது. அமெரிக்காவின் விருப்பத்தை, புறக்கணிக்க வேண்டிய நேரம் இது.” என்று பாலஸ்தீன பிரதேசத்துக்கான ஐ.நா. சிறப்பு பிரதிநிதி பிரான்செஸ்கா அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடன் இணைந்து வாஷங்டனில் டொனால்டு ட்ரம்ப் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “அமெரிக்கா காசா பகுதியைக் கைப்பற்றும். மேலும், நாங்கள் அதை சொந்தமாக்கிக் கொள்வோம். காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்கள் வேறு இடங்களில் மீள்குடியேற்றப்படுவார்கள். காசாவில் உள்ள வெடிக்காத ஆபத்தான அனைத்து குண்டுகள் மற்றும் பிற ஆயுதங்களை அகற்றுவதற்கு நாங்கள் பொறுப்பேற்போம்” என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.