‘‘காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றி சீரமைக்கும். இங்கு வசிக்கும் பாலஸ்தீனர்கள் வேறு நாடுகளில் குடியேற வேண்டும்’’ என்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பால் காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த அறிவிப்புக்கு பலதரப்பிலிருந்து எதிர்ப்பு எழுந்துள்ளது.
இஸ்ரேல் மீது, காசாவில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி திடீர் தாக்குதல் நடத்தினர். இஸ்ரேல் ராணுவத்தின் 34 பேர் உட்பட 251 பேரை பிணைக் கைதிகளாக காசாவுக்கு கொண்டு சென்றனர். இந்த தாக்குதலில் இஸ்ரேலியர்கள் 1,195 பேர் இறந்தனர். இஸ்ரேலில் புகுந்த ஹமாஸ் தீவிரவாதிகளை வேட்டையாடிய இஸ்ரேல் ராணுவம், காசா மீது குண்டு மழை பொழிந்தது. அக்டோபர் 27-ம் தேதி காசாவுக்குள் இஸ்ரேல் ராணுவம் ஊடுருவி தாக்குதலை தொடங்கியது.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 15 மாதங்களாக சண்டை நீடித்தது. இதில் பாலஸ்தீனர்கள் 47,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அமெரிக்காவின் ஆயுதங்கள் உதவியுடன் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசா பகுதியில் உள்ள பெரும்பான்மையான கட்டிடங்கள் தரைமட்டமாகி கான்கிரிட் குவியலாக காட்சியளிக்கின்றன. தற்போது வாழ தகுதியற்ற நகரமாக காசா மாறிவிட்டது.
அமெரிக்கா, எகிப்து மற்றும் கத்தார் நாடுகளின் தலையீடு காரணமாக இஸ்ரேல் – ஹமாஸ் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் கடந்த ஜனவரி 15-ம் தேதி ஏற்பட்டது. இஸ்ரேல் பிணைக் கைதிகளை ஹமாஸ் தீவிரவாதிகள் விடுவித்து வருகின்றனர். பதிலுக்கு இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்களும் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.
ஐ.நா முகாம்களில் தங்கியிருந்த பாலஸ்தீன மக்கள் காசாவில் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பி இடிபாடுகள் இடையே வசித்து வருகின்றனர். அங்கு அவர்களுக்கு அடிப்படை வசதி இல்லை. நிவார முகாம்களில் கிடைக்கும் உணவுகளை உண்டு வாழ்கின்றனர். காசா வாழ தகுதியற்ற நகரமாக உள்ளதால் இங்குள்ள பாலஸ்தீனர்களுக்கு அண்டை நாடுகளான எகிப்து மற்றும் ஜோர்டான் ஆகியவை அடைக்கலம் அளிக்க வேண்டும் என ட்ரம்ப் சில நாட்களுக்கு முன்பு வேண்டுகோள் விடுத்தார். இது பாலஸ்தீன மக்களை காசாவிலிருந்து அகற்றுவதற்கான திட்டம் என இரு நாடுகளும் மறுப்பு தெரிவித்தன.
அமெரிக்காவில் இஸ்ரேல் பிரதமர்: இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்கா சென்று அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்து பேசினார். காசா பகுதியில் நிரந்த அமைதியை ஏற்படுத்துவதற்கான வழி குறித்து இருவரும் ஆலோசித்தனர். அதன்பின் இருவரும் கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது அதிபர் ட்ரம்ப் அளித்த பேட்டியில் கூறியதாவது:
காசா பகுதியை அமெரிக்கா சொந்தமாக்கி கொள்ளும். அங்குள்ள வெடிக்காத குண்டுகள் மற்றும் இதர ஆயுதங்களை நாங்கள் அகற்றுவோம். காசாவில் உள்ள 20 லட்சம்பேர் மற்ற தங்களை ஏற்றுக்கொள்ளும் மற்ற +நாடுகளுக்கு செல்ல வேண்டும். காசாவில் இடிந்துள்ள கட்டிடங்களையும் அகற்றி அங்கு பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவோம். இதன் மூலம் காசாவில் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகும், மக்கள் வசிக்கும் பகுதியாகவும் மாறும். மத்திய கிழக்கின் கடலோர சுற்றுலா தலமாக காசா மாறலாம். காசாவுக்கு நான் விரைவில் செல்லவுள்ளேன்.
ஆனால் இந்த மறு சீரமைப்பு நடவடிக்கை, காசாவில் ஏற்கெனவே போராடி, வாழ்ந்து, துயரங்களை அனுபவித்த அதே மக்கள் மீண்டும் குடியேறுவதற்கான நடவடிக்கையாக இருக்கக் கூடாது. இவ்வாறு அதிபர் ட்ரம்ப் கூறினார்.
நெதன்யாகு வரவேற்பு: காசாவை அமெரிக்கா சொந்தமாக்கி கொள்ளும் என்ற அதிபர் டிரம்ப்பின் அறிவிப்பை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வரவேற்றுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘‘ அமெரிக்கா, இஸ்ரேலின் மிக சிறந்த நட்பு நாடு. அமெரிக்க அதிபரின் காசா திட்டம் வரலாற்றை மாற்றும். இத்திட்டத்தில் கவனம் செலுத்துவது அனைவருக்கும் நல்லது’’ என்றார்.
சர்வதேச விதிமுறை மீறல்: காசாவை அமெரிக்கா கைப்பற்றும் என்ற அறிவிப்பை அங்கு வசிக்கும் பாலஸ்தீனர்கள் நிராகிரத்துள்ளனர். காசாவின் ரஃபா பகுதியில் உள்ள ஹதம் அசாம் (34) என்பவர் கூறுகையில், ‘‘ அமெரிக்க அதிபரின் கருத்தை காசா மக்கள் நிராகரித்துள்ளனர். காசாவை குப்பைக் காடாக அதிபர் டிரம்ப் நினைக்கிறார். நிச்சயமாக இல்லை’’ என்றார்.
பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் கூறுகையில், ‘‘ பல ஆண்டுகளாக போராடி, உன்னத தியாகங்களை செய்த பாலஸ்தீன மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். பாலஸ்தீன மக்கள் தங்கள் நிலம், உரிமைகள் மற்றும் புனித தலங்களை விட்டுக் கொடுக்கமாட்டார்கள். காசாவை அமெரிக்கா கைப்பற்றினால், அது கடுமையான சர்வதே விதிமுறை மீறலாக இருக்கும்’’ என்றார்.