புதுடெல்லி: நாடு கடத்தப்படும் இந்தியர்கள், எந்த வகையிலும் தவறாக நடத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய அமெரிக்க அரசுடன் இணைந்து செயல்படுகிறோம் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மாநிலங்களவையில் தெரிவித்தார். மேலும், அமெரிக்க ராணுவத்தால் இந்தியர்கள் கைவிலங்குடன் நாடு கடத்தப்பட்டது குறித்தும் அவர் விரிவாக விளக்கம் அளித்தார்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியிருந்ததாகக் கூறி 104 இந்தியர்களை அந்நாட்டு அரசு தனது ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு நேற்று திருப்பி அனுப்பியது. கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் அவர்கள் அழைத்து வரப்பட்டதாக புகார் எழுந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி கோரியும் எதிர்க்கட்சி எம்பிக்கள் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இன்று அமளியில் ஈடுபட்டனர். இதனால், இரு அவைகளிலும் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எதிர்க்கட்சிகளின் தொடர் அழுத்தத்தை அடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார். அப்போது அவர், “சட்டவிரோதமாக தங்கி இருக்கும் வெளிநாட்டவர்களை அமெரிக்கா நாடு கடத்துவது புதிதல்ல. 2009-ம் ஆண்டு முதல் பலர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். நாடு கடத்தும் செயல்முறையும் புதிதல்ல. அது பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இது ஒரு நாட்டுக்கு மட்டும் பொருந்தக்கூடிய கொள்கையும் அல்ல. பிப்ரவரி 5, 2025 அன்று இந்தியா வந்து சேர்ந்த இந்தியர்கள் விஷயத்திலும் கடந்த கால நடைமுறைகளே பின்பற்றப்பட்டன. அதில் எந்த மாற்றமும் இல்லை.
அமெரிக்காவின் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்தால் (Immigration and Customs Enforcement) ஒழுங்கமைக்கப்பட்டு, நாடு கடத்தல்கள் செயல்படுத்தப்படுகின்றன. விமானம் மூலம் நாடுகடத்தப்படுவதற்கான விதிமுறைகள் 2012 முதல் அமலில் உள்ள எஸ்ஓபி (standard operating procedure)-யை அடிப்படையாகக் கொண்டவை. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எவ்வித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. உணவு மற்றும் பிற தேவைகள், சாத்தியமான மருத்துவ அவசரநிலைகள் உட்பட விமான பயணத்தின்போது நாடு கடத்தப்படுபவர்களின் தேவைகள் கவனிக்கப்படுகின்றன. கழிப்பறை இடைவேளையின் போது, தேவைப்பட்டால் தற்காலிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இது சிவிலியன் விமானங்களுக்கும் ராணுவ விமானங்களுக்கும் பொருந்தும்.
விமானப் பயணத்தின்போது நாடு திரும்பும் நாடுகடத்தப்பட்டவர்கள் எந்த வகையிலும் தவறாக நடத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய நாங்கள் அமெரிக்க அரசுடன் இணைந்து செயல்படுகிறோம். அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டினர், வெளிநாடுகளில் சட்டவிரோதமாக வசிப்பது கண்டறியப்பட்டால் அவர்களைத் திரும்ப அழைத்துச் செல்வது கடமையாகும். சட்டப்பூர்வ நடமாட்டத்தை ஊக்குவிப்பதும், சட்டவிரோத நடமாட்டத்தைத் தடுப்பதும் நமது கூட்டு நலனில் அடங்கும். சட்டவிரோத குடியேறிகள் மீது வலுவான நடவடிக்கை எடுப்பதில் நமது கவனம் இருக்க வேண்டும்” என்று ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், “இந்திய குடிமக்களை கைகளில் விலங்கிட்டு நாடு கடத்திய ட்ரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கை நாட்டுக்கான அவமானம். அவ்வாறு செய்யப்பட்டதை நாங்கள் எதிர்க்கிறோம். தங்கள் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை நாடு கடத்தும் முழு உரிமையும் அவர்களுக்கு உண்டு. ஆனால், திடீரென ஒரு ராணுவ விமானத்தில் ஏற்றி, கைகளில் விலங்கிட்டு அனுப்பி வைத்தது இந்தியாவுக்கான அவமானம், இது இந்தியர்களின் கண்ணியத்துக்கான அவமானம்” என்று தெரிவித்துள்ளார்.
நடந்தது என்ன? – அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 104 இந்தியர்கள், இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இதில் 19 பெண்கள், 13 சிறார் மற்றும் 4 வயது குழந்தையும் அடங்கும். அமெரிக்க ராணுவ விமானத்தில் வந்த அவர்கள், பஞ்சாபின் அமர்தசரஸ் விமான நிலையத்தில் தரையிறங்கினர். இது தொடர்பான வீடியோவை அமெரிக்க எல்லை பாதுகாப்பு ரோந்து படையின் தலைவர் மைக்கேல் பாங்க் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் இந்தியர்களின் கை, கால்களில் விலங்கிடப்பட்டிருப்பது தெளிவாக தெரிகிறது.
அதோடு மைக்கேல் பாங்க் வெளியிட்ட பதிவில், “சட்டவிரோத ஏலியன்களை இந்தியாவுக்கு வெற்றிகரமாக திருப்பி அனுப்பி உள்ளோம். இது மிக நீண்ட தொலைவு பயணம். சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நீங்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்தால், நிச்சயமாக விரட்டியடிப்போம்” என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை எதிரொலித்தது.
அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்களின் கை, கால்களில் விலங்கிடப்பட்ட விவகாரம் தொடர்பாக மக்களவை, மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் எம்பிக்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டு அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இரு அவைகளும் பலமுறை ஒத்திவைக்கப்பட்டன. “அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்தியர்களின் கை, கால்களில் விலங்கிடப்பட்டது ஏன்? இந்தியர்களை தீவிரவாதிகளை போன்று நடத்தியது ஏன்?” என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் கேள்வி எழுப்பினர்.