ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 91 ஆயிரத்து 558 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட நாதக வேட்பாளர் உட்பட 45 பேரும் டெபாசிட் இழந்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து, இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்த நிலையில், இண்டியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சியின் சார்பில் மா.கி.சீதாலட்சுமி உள்ளிட்ட 46 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 5-ம் தேதி நடந்தது. 67.97% வாக்குகள் பதிவாகின.
வாக்கு எண்ணிக்கை: இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் நேற்று காலை தொடங்கியது. மொத்தம் பதிவான 251 தபால் வாக்குகளில், திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் 197 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 13 வாக்குகளும், பதிவு செய்யப்பட்ட மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு 15 வாக்குகளும், நோட்டாவுக்கு 8 வாக்குகளும் பதிவாகி இருந்தன. 18 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் 17 சுற்றுகளாக எண்ணப்பட்டன. முதல் சுற்றில் தொடங்கி அனைத்து சுற்றுகளிலும் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் தொடர்ந்து முன்னிலை பெற்று வந்தார்.
17 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், திமுக வேட்பாளர் 90 ஆயிரத்து 535 வாக்குகள் முன்னிலை பெற்று இருந்தார். இதனை தொடர்ந்து, பழுதான 3 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள், விவிபேட் இயந்திர பதிவுகளின் அடிப்படையில் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 91,558 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நாதக வேட்பாளர் சீதாலட்சுமி உட்பட போட்டியிட்ட 45 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.
ஈரோடு ஃபார்முலாவுக்கு வெற்றி: தேர்தலில் வெற்றி பெற்ற வி.சி.சந்திரகுமார், ‘மக்களை நேரடியாக சந்தித்து, வாக்கு சேகரித்து வெற்றி பெற வேண்டும் என்ற ஈரோடு ஃபார்முலா வென்றுள்ளதாக’ தெரிவித்தார்.
‘கடந்த தேர்தலை காட்டிலும் இரு மடங்கு வாக்குகளைப் பெற்ற நிலையில், ஈரோடு பிரபாகரன் மண் என நிரூபிக்கப்பட்டுள்ளது’ என நாதக வேட்பாளர் சீதாலட்சுமி தெரிவித்தார்.
முதல்வர் பெருமிதம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், 1.15 லட்சத்துக்கும் மேலான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். இந்த மகத்தான வெற்றியை வழங்கிய ஈரோடு கிழக்கு வாக்காளர் களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.
திமுகவுக்கும், கூட்டணி கட்சி களுக்கும், இந்த ஆட்சிக்கும், நாம் செயல்படுத்தி வரும் உன்னத திட்டங்களுக்கும் மக்கள் அளித்துள்ள மாபெரும் அங்கீகாரம் தான் இந்த வெற்றி. தேர்தலுக்கு முன்பே வெற்றி யாருக்கு என்பதை உணர்ந்து விட்ட எதிர்க்கட்சிகள், களத்துக்கே வராமல் ஓடிய காட்சியையும் முன்கூட்டியே தமிழகம் பார்த்துவிட்டது.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரகுமார், தொகுதி மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் முன்மாதிரி சட்டப்பேரவை உறுப்பினராக செயல் படுவார். எங்களது நன்றியின் அடையாளமாக எப்போதும் மக்களுக்கு உண்மையாக இருப்போம். மேற்கு மண்டல மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி காட்டுவோம் என்று உறுதி அளிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.