Rohit Sharma : ரோகித் சர்மா கம்பேக்… ராகுல் டிராவிட் சாதனை முறியடிப்பு

Rohit Sharma record ODI | இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அரைசதம் அடித்து, புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். இந்திய அணிக்காக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 4வது இடத்தில் இருந்த ராகுல் டிராவிட் சாதனையை ரோகித் சர்மா முறியடித்து, இப்போது அவர் 4வது இடத்தைப் பிடித்துள்ளார். அதேநேரத்தில் கடந்த சில மாதங்களாக பார்ம் இல்லாமல் இருந்து வந்த ரோகித் இப்போட்டியில் பார்முக்கும் திரும்பியிருக்கிறார். இதனால் இந்திய கிரிக்கெட் அணி ரசிகர்கள் மிகப்பெரிய மகிழ்ச்சியில் உள்ளனர். 

இந்தியா -இங்கிலாந்து மோதல் 

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி கட்டாக்கில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும் முனைப்பிலும், இங்கிலாந்து இப்போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்திலும் களமிறங்கின. ஏனென்றால் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. டாஸ் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய அந்த அணி 49.5 ஓவர்களில் 304 ரன்கள் எடுத்தது.

இந்திய அணி அதிரடி சேஸிங்

இதன்பிறகு 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. கேப்டன் ரோகித் சர்மா, துணைக்கேப்டன் சுப்மன் கில் ஓப்பனிங் இறங்கினர். இருவரும் அதிரடி ஆட்டத்தை ஆடினர். இதனால் இந்திய அணி  16.4 ஓவர்களில் 136 ரன்கள் எடுத்தது. அப்போது 52 ரன்களில் 60 ரன்கள் எடுத்திருந்த சுப்மன் கில் போல்டு என்ற முறையில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து விளையாட வந்த விராட் கோலி 5 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

ரோகித் சர்மா சாதனை

இன்னொரு புறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோகித் சர்மா 30 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதில் 3 சிக்சர்களும் விளாசினார் ரோகித். நீண்ட நாட்களாக பார்ம் இல்லாமல் இருந்த ரோகித் இப்போட்டியில் பார்முக்கு வந்திருப்பது  இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அதேநேரத்தில் ஒரு பெரிய ரெக்கார்டு ஒன்றையும் ரோகித் சர்மா படைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 4வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 10899 ரன்களுடன் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டிராவிட் 4வது இடத்தில் இருந்த நிலையில், அந்த சாதனையை இன்று ரோகித் முறியடித்தார். சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த இந்திய கிரிக்கெட் பிளேயர்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்கள் முறையே சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, சவுரவ் கங்குலி ஆகியோர் உள்ளனர்.

மேலும் படிங்க: “கேப்டனின் பங்களிப்பு சரி இல்லை என்றால் டீமும் சரியாக விளையாடாது” – கபில் தேவ்

மேலும் படிங்க: சிஎஸ்கே அணிக்கு ஜாக்பாட்; தீபக் சாஹர் இல்லைனா என்ன? இந்த வீரர் சிஎஸ்கேவுக்கு விக்கெட்டை அள்ளி கொடுப்பார் போலயே!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.