வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்டு, உயிருக்கு போராடுபவர்களை கருணை கொலை செய்ய அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனு நேற்று விசாரணைக்கு ஏற்கப்பட்டது.
உலக அளவில் ரேபிஸ் எனப்படும் வெறிநாய்க்கடி நோய் அதிகரித்து வருகிறது. நாய் மட்டுமன்றி பூனை, குரங்கு உள்ளிட்ட விலங்குகள் கடிப்பதாலும் இந்த நோய் ஏற்படுகிறது. உலக அளவில் ரேபிஸ் நோயால் ஆண்டுக்கு 65,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். இந்தியாவிலும் ரேபிஸ் நோய் உயிரிழப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது.
வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து காய்ச்சல், வாந்தி வருவதுடன் உணவு சாப்பிடவும், தண்ணீர் குடிக்கவும் சிரமம் எற்படும். அவர்களின் உயிரிழப்பு வேதனையானதாக இருக்கும். இந்த சூழலில் வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்டு, உயிருக்கு போராடுபவர்களை கருணை கொலை செய்ய அனுமதிக்க கோரி தன்னார்வ தொண்டு அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
“கண்ணியம், கவுரவத்துடன் உயிரிழப்பது மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்று” கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்டோரை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டு உள்ளது.
இந்த மனு நீதிபதிகள் பி.ஆர்.கவாய், வினோத் சந்திரன் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அடுத்த 2 வாரங்களில் விசாரணை தொடங்கப்படும் என்று உறுதி அளித்தனர்.