ஏற்கனவே இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை இழந்த நிலையில், தற்போது ஒருநாள் தொடரையும் இழந்துள்ளது. அந்த அணி ஒடிசா மாநிலம் கட்டாக் மைதானத்தில் நேற்று (பிப்.09) நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியிடம் 4 விக்கெட்கள் வித்தியாசத்தி தோல்வி அடைந்தது. இந்த நிலையில், போட்டி முடிந்த பின்பு இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தோல்விக்கான காரணங்களை விவரித்துள்ளார்.
இதை செய்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம்
அவர், நாங்கள் நிறைய விஷயங்களை சிறப்பாக செய்தோம் என்று நினைக்கிறேன். பேட்டிங்கில் சிறப்பாகவே செயல்பட்டோம், ஆனால் யாராவது ஒருவர் ஸ்கோரை 350 வரை கொண்டு சென்று இருக்கலாம். ரோகித் சர்மா தான் இந்த வெற்றிக்கு காரணம். அவர் சிறப்பாக ஆடினார். கடந்த சில ஆண்டுகளாக ஒருநாள் போட்டிகளில் அவர் இப்படிதான் பேட்டிங் செய்து வருகிறார்.
நாங்கள் அதிக ரன்கள் அடிக்க வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் கடைசி விக்கெட்கள் சரிந்தது. பவர் பிளேவில் சிறப்பாக விளையாடினோம். 330 முதல் 350 வரை கொண்டு சென்றிருந்தால் இந்த போட்டியில் இந்திய அணியை தடுத்து இருக்கலாம். எங்களுக்கு சாதகமாக முடிவு கிடைக்கவில்லை என்றாலும் நாங்கள் நேர்மையாக இருக்க விரும்புகிறோம் எனக் கூறினார்.
மேலும் படிங்க: Ind vs Eng: பும்ராவுக்கு என்ன ஆச்சு? பயிற்சியாளர் சொன்ன பதில்!
இந்த போட்டியில் இங்கிலாந்து அணியே முதலில் பேட்டிங் செய்தது. 49.5 ஓவர்களில் ஆல் அவுட் ஆன அந்த அணி 304 ரன்கள் அடித்திருந்தது. தொடக்க வீரர் பென் டக்கெட், ஜோ ரூட் முறையே 65, 69 ரன்கள் அடித்திருந்தனர்.
இதைதொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி, இந்த இலக்கை 44.3 ஓவர்களிலேயே எட்டி வெற்றி பெற்றது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இந்திய அணி சிறப்பாக தொடக்கத்தை கொடுத்தனர். ரோகித் 119 ரன்களும் சுப்மன் கில் 60 ரன்களும் அதிகபட்சமாக அடித்தனர்.
ரோகித் சர்மா கம்பேக்
கடந்த 2024 ஆகஸ்ட்டில் இருந்து ரோகித் சர்மா ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. சமீபத்தில் நடைப்பெற்ற டெஸ்ட் தொடர்களில் கூட படுமோசமாக ஆடினார். இந்த நிலையில், இப்போட்டியில் சதம் அடித்து ஃபார்முக்கு திரும்பி இருக்கிறார். சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக அவர் ஃபார்முக்கு திரும்பியது அவரது ரசிகர்களுக்கு இடையே நிம்மதியை கொடுத்துள்ளது.
ஜோஸ் பட்லர் கேப்டன்சி
ஜோஸ் பட்லர் விக்கெட் கீப்பிங்கிலும் பேட்டிங்கிலும் என்னதான் சிறப்பாக விளையாடி வந்தாலும் சமீபகாலமாக அவரது கேப்டன்சியில் இங்கிலாந்து அணி பல தோல்விகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை முதல் அவரது கேப்டன்சியில் இங்கிலாந்து அணி அதிக தோல்விகளை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில், இன்னும் ஒரு வாரத்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடங்க உள்ள நிலையில், இங்கிலாந்து அணி எப்படி அதில் விளையாட போகிறது, ஜோஸ் பட்லரின் கேப்டன்சி எப்படி இருக்கப்போகிறது என்ற கேள்விகள் எழும்பி உள்ளன.
மேலும் படிங்க: தனது 36வது வயதில் ஒருநாள் போட்டியில் அறிமுகமான இந்திய வீரர் யார் தெரியுமா?