கன்னியாகுமரி அருகே காமராஜரின் உருவம் பதித்த கல்வெட்டு சேதம்: செல்வப்பெருந்தகை கண்டனம்

சென்னை: “கன்னியாகுமரி மாவட்டம், மாத்தூர் தொட்டிபாலத்தில் அமைந்துள்ள காமராஜரின் உருவம் பதித்த கல்வெட்டு மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு, சேதப்படுத்தப்பட்டதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்” என்று அக்கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். திருவுருவச் சிலையும், கல்வெட்டும் விரைவில் திறக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கன்னியாகுமரி மாவட்டம், மாத்தூர் தொட்டிபாலத்தில் அமைந்துள்ள கர்மவீரர் காமராஜரின் உருவம் பதித்த கல்வெட்டு மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு, சேதப்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் காமராஜர் மீது அளவற்ற பற்று கொண்டுள்ள அப்பகுதி மக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இத்தகைய அநாகரிக வன்முறைச்செயலுக்கு காரணமானவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். சமீபகாலமாக அப்பகுதியில் மதவாத சக்திகளின் செயல்பாடுகள் அதிகரித்து வருகிற நிலையில் இச்சம்பவம் நடைபெற்றிருக்கிறது. எனவே, சம்மந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லையெனில், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படுகிற நிலை உருவாகக்கூடிய வாய்ப்பு உள்ளது.

எனவே, காவல் துறையினர் இந்த கல்வெட்டு உடைப்பு சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். காமராஜர் உருவம் பதித்த கல்வெட்டை உடைத்து, சேதப்படுத்தப்பட்டதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். கல்வெட்டு உடைக்கப்பட்ட இடத்தில் மீண்டும் காமராஜரின் திருவுருவச் சிலையும், கல்வெட்டும் விரைவில் திறக்கப்படும்,” என்று அவர் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.