IPL 2025: கடந்த சில சீசன்களாகவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது எனலாம். 2021ஆம் ஆண்டில் சஞ்சு சாம்சன் கேப்டனாக பொறுப்பேற்றதில் இருந்து தொடர்ச்சியாக அந்த அணி ஒவ்வொரு ஆண்டும் பலம்பெற்றுக்கொண்டே வருகிறது.
2021இல் 7வது இடத்தில் முடித்த ராஜஸ்தான் அணி (Rajasthan Royals), 2022இல் இறுதிப்போட்டி வரை சென்று நூலிழையில் கோப்பையை தவறிவிட்டது. தொடர்ந்து, 2023இல் 1 புள்ளி வித்தியாசத்தில் பிளே ஆப் செல்லும் வாய்ப்பை இழந்தது என்றாலும், 2024இல் குவாலிஃபயர் 2 வரை வந்து வாய்ப்பை தவறவிட்டது.
IPL 2025: இளம் வீரர்கள் நிறைந்த ராஜஸ்தான் ராயல்ஸ்
ஜாஸ் பட்லர், டிரென்ட் போல்ட், சஹால், அஸ்வின் என அனுபவம் வாய்ந்த வீரர்களாலும், சஞ்சு சாம்சனின் நேர்த்தியான கேப்டன்ஸியால் பலமாக திகழ்ந்த ராஜஸ்தான் அணி இந்த முறை இளம் வீரர்கள் அடங்கிய அணியாக மாறியுள்ளது. இருப்பினும் அதே பலத்துடனே திகழ்கிறது எனலாம்.
சஞ்சு சாம்சன் (Sanju Samson) உடன் ஜெய்ஸ்வால், ரியான் பராக், துருவ் ஜுரேல், நிதிஷ் ராணா என வலிமையான இந்திய பேட்டிங் ஆர்டரை கொண்டிருக்கிறது. இதில் ஷிம்ரோன் ஹெட்மயரும் இணைவார். தொடர்ந்து பந்துவீச்சில் சந்தீப் சர்மா உடந் ஜோப்ரா ஆர்ச்சர், ஆகாஷ் மத்வால், மகேஷ் தீக்ஷனா, வனிந்து ஹசரங்கா, துஷார் தேஷ்பாண்டே, ஃபசல்ஹக் ஃபரூக்கி, குவேனா மபாகா உள்ளிட்டோருடம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான அணி கட்டமைக்கப்பட்டது.
IPL 2025: ராகுல் டிராவிட்டின் வருகை
கடந்த சில ஆண்டுகளாக தலைமை பயிற்சியாளராக இருந்த சங்கக்காராவுக்கு பதில், 2024 டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வெல்ல பக்கபலமாக இருந்த ராகுல் டிராவிட் (Rahul Dravid) அந்த இடத்திற்கு வந்துள்ளார். அவரின் வருகையால்தான் ராஜஸ்தான் அணி முற்றிலும் இளம் வீரர்களை கொண்ட அணியாக மாறியுள்ளது. சஹால், அஸ்வின், பட்லர், போல்ட் யாரையும் தக்கவைக்கவும் இயலாத, ஏலத்தில் எடுக்கவும் முடியாத சூழலில் ராகுல் டிராவில் இந்த இளம் அணியை கட்டமைத்திருக்கிறார் எனலாம்.
IPL 2025: சஞ்சு சாம்சனுக்கு அறுவை சிகிச்சை
அப்படியிருக்க, ராஜஸ்தான் அணியின் முக்கிய தூண்களில் ஒருவர் கேப்டன் சஞ்சு சாம்சன் தற்போது அவருக்கு இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டி20 போட்டியின்போது காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவருக்கு நேற்று (பிப். 11) விரலில் அறுவை சிகிச்சை (Sanju Samson Finger Operation) மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் இருந்து முழுமையாக குணமடைய ஒரு மாத காலம் ஆகும் என கூறப்படுகிறது. ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 21ஆம் தேதி அல்லது அதன் நெருக்கத்தில் தொடங்கும் என்பதால் சஞ்சு சாம்சன் அதற்குள் காயத்தில் இருந்து குணமடைந்துவிடுவார் என கூறப்படுகிறது.
IPL 2025: நிதிஷ் ராணாவுக்கு வாய்ப்பு இருக்கா?
ஒருவேளை சஞ்சு சாம்சன் ஐபிஎல் தொடருக்குள் குணமடையவில்லை என்றால் அது ராஜஸ்தான் அணிக்கு பெரிய பிரச்னையை கொண்டுவரும். ஏனென்றால் அவரை தவிர கேப்டன்ஸியை ஏற்கும் அளவிற்கு வீரர்கள் யாருமில்லை. நிதிஷ் ராணா (Nitish Rana) ஏற்கெனவே கேகேஆர் அணிக்கு ஷ்ரேயாஸ் ஐயர் இல்லாத 2023 சீசனில் கேப்டனாக செயல்பட்டுள்ளார் என்றாலும் ராஜஸ்தான் அவரை நம்பி கேப்டன்ஸியை ஒப்படைக்குமா என்பது பெரிய கேள்வியாக உள்ளது. அவர் இல்லையெனில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலிடம்தான் ஆர்ஆர் நிர்வாகம் செல்ல வேண்டும்.
IPL 2025: கேப்டனாகும் யஷஸ்வி ஜெய்ஸ்வால்?
யஷஸ்வி ஜெய்ஸ்வால் (Yashasvi Jaiswal) கேப்டன் பொறுப்பை ஏற்கும் அளவிற்கு முதிர்ச்சி பெற்றுவிட்டாரா என்றாலும் அவர் இந்திய அணியின் உச்ச நட்சத்திரமாக திகழ்கிறார். விராட் கோலி அவரது 22 வயதிலேயே ஆர்சிபி அணிக்கு கேப்டன் பொறுப்பை ஏற்றார். அவர்தான் ஐபிஎல் தொடரில் இளம் வயதில் கேப்டன் பொறுப்பை பெற்றவர். அப்படியிருக்க, யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு தற்போது 23 வயதாகிறது. எனவே, சஞ்சு சாம்சன் ஒருவேளை தொடக்க கட்ட போட்டிகளில் விளையாட முடியாமல் போனால் யஷஸ்வி ஜெய்ஸ்வாலிடம்தான் கேப்டன்ஸி பொறுப்பு செல்லும் என கூறப்படுகிறது.