இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றிய இந்தியா

அகமதாபாத்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் நாக்பூர் மற்றும் கட்டாக்கில் நடந்த முதல் இரு ஆட்டங்களில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.

இந்த நிலையில் இந்தியா – இங்கிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 356 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக சுப்மன் கில் 112 ரன் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷித் 4 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 357 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது.

இங்கிலாந்தின் தொடக்க வீரர்களாக பென் டக்கட் மற்றும் பில் சால்ட் ஆகியோர் களம் இறங்க்னர். இருவரும் அதிரடியாக ஆடினர். முதல் விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்த நிலையில் இந்த இணை பிரிந்தது. டக்கட் 34 ரன்னிலும், பில் சால்ட் 23 ரன்னிலும் அவுட் ஆகினர்.

இதையடுத்து களம் இறங்கிய டாம் பான்டன் 38 ரன், ஜோ ரூட் 24 ரன். ஹாரி புரூக் 19 ரன், ஜாஸ் பட்லர் 6 ரன், லியாம் லிவிங்ஸ்டன் 9 ரன் எடுத்து அவுட் ஆகினர். அடுத்து வந்த அடில் ரஷித் ரன் எடுக்காமலும், மார்க் வுட் 9 ரன்னிலும் அவுட் ஆகினர்.

இறுதியில் இங்கிலாந்து அணி 34.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 214 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 142 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக கஸ் அட்கின்சன் மற்றும் டாம் பான்டன் தலா 38 ரன்கள் எடுத்தனர்.

இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, அக்சர் படேல், ஹர்த்திக் பாண்ட்யா ஆகியோர் தலா 2 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என முழுமையாக கைப்பற்றியது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.