கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்தவர் கோபாலக்கண்ணன். இவருக்கும், விஜயா என்பவருக்கும் கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனாலும் இவர்களுக்கு குழந்தை இல்லை. அதனால் இருவரும் மன வருத்தத்தில் இருந்திருக்கின்றனர்.

சமையல் கலைஞரான கோபாலக்கண்ணன் கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் சமையல்காரராக பணியாற்றி வந்தார். அதனால் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சொந்த ஊருக்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். இந்த முறை தீபாவளிக்கு வந்த கோபாலக்கண்ணன், அதன்பிறகு கோயம்புத்தூருக்கு வேலைக்கு செல்லவில்லை.

இந்த நிலையில்தான், நேற்று முன் தினம் இரவு சாப்பிட்டுவிட்டு படுத்த கோபாலக்கண்ணன், மறுநாள் காலையில் எழுந்திருக்கவில்லை. வாயில் நுரை தள்ளியவாறு பேச்சு மூச்சற்றுக் கிடந்துள்ளார். அவரைப் பார்த்ததும், `என்னங்க… என்னங்க…’ என்று கதறியழுத்திருக்கிறார் அவரது மனைவி. அலறலைக் கேட்டு ஒடி வந்த அக்கம்பக்கத்தினர், கோபாலக்கண்ணனை கடலூர் அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றிருக்கின்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து நடைபெற்ற உடற்கூராய்வு சோதனையில் அவரது வயிற்றில் இருந்த உணவில் விஷம் இருந்தது தெரியவந்தது.
அவரது மனைவி விஜயாவிடம் இதுகுறித்து போலீஸார் விசாரணை செய்தனர். அப்போது சாப்பாட்டில் விஷம் வைத்துக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டிருக்கிறார் விஜயா. இதுகுறித்து நாம் விசாரணை அதிகாரிகளிடம் பேசியபோது, “கோபாலக்கண்ணன் கடந்த 5 வருடங்களாக கோயம்புத்தூரில் சமையல் வேலை செய்து வந்திருக்கிறார். குழந்தை இல்லாத விரக்தியில் இருந்த கோபாலக்கண்ணன், எப்போதாவதுதான் வீட்டுக்கு வந்து சென்றிருக்கிறார். அதனால் கட்டியங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த தேவநாதன் என்பவருடன் விஜயாவுக்கு நட்பு ஏற்பட்டிருக்கிறது. விஜயாவுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுத்திருக்கிறார் தேவநாதன். அதனால் விஜயாவுக்கும், தேவநாதனுக்கும் இருந்த நட்பு காதலாக மாறியிருக்கிறது. அதையடுத்து வீட்டிலும், வெளியிலும் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்திருக்கின்றனர்.

இவர்களின் காதல் விவகாரம் கோபாலக்கண்ணனின் தந்தை ராதாகிருஷ்ணனுக்கு தெரிய வந்ததால், அவரிடம் அதுகுறித்து தெரிவித்திருக்கிறார். அதனால் தீபாவளிக்கு ஊருக்கு வந்த கோபாலக்கண்ணன், அதன்பிறகு வேலைக்குச் செல்லவில்லை. அவர் வீட்டிலேயே இருந்ததால், விஜயாவும், தேவநாதனும் சந்தித்துக் கொள்ள முடியவில்லை. அதனால் கோபாலக்கண்ணனை கொலை செய்யலாம் என்று விஜயாவும், தேவநாதனும் முடிவெடுத்திருக்கிறார்கள். எப்படி கொலை செய்வது என்று இவர்கள் ஆலோசித்தபோதுதான், சாப்பாட்டில் விஷம் வைக்கும் முடிவுக்கு வந்திருக்கிறார்கள். பூச்சிக்கொல்லி மருந்தை மீன் குழம்பில் வைத்ததால் அவரால் அதை உணர முடியவில்லை” என்றனர்.