விரைவில் லாஸ் ஏஞ்சல்ஸ், பாஸ்டனில் புதிய இந்திய தூதரகங்கள்: பிரதமர் மோடி அறிவிப்பு

வாஷிங்டன்: இந்திய – அமெரிக்க மக்களுக்கு இடையிலான உறவை வலுப்படுத்த, விரைவில் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் பாஸ்டனில் புதிய இந்திய தூதரகங்கள் திறக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்கள் மத்தியில் ஆற்றிய உரை: அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது அன்புக்குரிய நண்பர் அதிபர் ட்ரம்ப்புக்கு, எனது மனமார்ந்த நன்றி. அதிபர் ட்ரம்ப் தமது தலைமையின் மூலம் இந்திய-அமெரிக்க உறவைப் போற்றி புத்துயிர் அளித்துள்ளார்.

அவரது முதல் பதவிக்காலத்தில் நாங்கள் இணைந்து பணியாற்றிய போது இருந்த உற்சாகம்; இன்றும் அதே அளவில் உள்ளது. அன்று இருந்த உற்சாகம், ஆற்றல் மற்றும் அதே அர்ப்பணிப்பை இன்றும் நான் உணர்ந்தேன்.

அவரது முதல் பதவிக்காலத்தில் நாம் அடைந்த சாதனைகள் மற்றும் ஆழ்ந்த பரஸ்பர நம்பிக்கை ஆகியவை, இன்றைய விவாதங்களுக்கு பாலமாக இருந்தன. அதே நேரத்தில், புதிய இலக்குகளை அடைவதற்கான உறுதியும் இருந்தது. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ஒத்துழைப்பும், கூட்டாண்மையும் ஒரு சிறந்த உலகத்தை வடிவமைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

அமெரிக்கர்கள் அதிபர் ட்ரம்ப்பின் குறிக்கோளான “அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்குங்கள்” அல்லது மகா(“MAGA”) பற்றி நன்கு அறிந்திருக்கிறார். ‘வளர்ச்சியடைந்த இந்தியா 2047’ என்ற உறுதியுடன் இந்திய மக்களும் பாரம்பரியம் மற்றும் வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேறி வருகின்றனர்.

அமெரிக்காவின் மொழியில், வளர்ந்த இந்தியா என்றால் இந்தியாவை மீண்டும் சிறந்ததாக்குங்கள், அதாவது மிகா( “MIGA”) என்று பொருள். அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து செயல்படும்போது, அதாவது “MAGA” மற்றும் “MIGA”, இரண்டும் இணையும்போது செழிப்புக்கான “MEGA” கூட்டாண்மை உருவாகிறது. மேலும், இந்த மெகா உணர்வு நமது இலக்குகளுக்கு புதிய பரிமாணத்தையும், உயர்ந்த நோக்கத்தையும் அளிக்கிறது.

இன்று, 2030-ம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை 500 பில்லியன் டாலர்களாக இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். பரஸ்பர நன்மை பயக்கும் வர்த்தக ஒப்பந்தத்தை முன்கூட்டியே முடிப்பதில் எங்கள் குழுக்கள் பாடுபடும்.

இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகத்தை வலுப்படுத்துவோம். எரிசக்தி உள்கட்டமைப்பில் முதலீடும் அதிகரிக்கும். அணுசக்தித் துறையில், சிறிய உலைகளின் திசையில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் நாங்கள் பேசினோம்.

இந்தியாவின் பாதுகாப்புத் தயாரிப்பில் அமெரிக்கா முக்கிய பங்கு வகிக்கிறது. உத்திப்பூர்வ மற்றும் நம்பகமான நண்பர்களாக, கூட்டு மேம்பாடு, கூட்டு உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் ஆகிய திசையில் நாங்கள் தீவிரமாக முன்னேறி வருகிறோம்.

வரவிருக்கும் காலத்தில், புதிய தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்கள் எங்கள் திறனை அதிகரிக்கும். தானியங்கி அமைப்புகளுக்கான தொழில் கூட்டணியைத் தொடங்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

அடுத்த பத்தாண்டுகளுக்கு பாதுகாப்புத்துறை ஒத்துழைப்புக்கான சட்டக வரைவு உருவாக்கப்படும். பாதுகாப்பு செயல்பாடு, தளவாடங்கள், பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு ஆகியவை அதன் முக்கிய பகுதிகளாக இருக்கும்.

இருபத்தியோராம் நூற்றாண்டு தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் நூற்றாண்டாகும். ஜனநாயக மதிப்புகளில் நம்பிக்கை கொண்ட நாடுகளுக்கு இடையே தொழில்நுட்பத் துறையில் நெருக்கமான ஒத்துழைப்பு என்பது முழு மனிதகுலத்திற்கும் புதிய திசை, வலிமை மற்றும் வாய்ப்புகளை அளிக்கும்.

செயற்கை நுண்ணறிவு, குறைக்கடத்திகள், குவாண்ட்டம், உயிரி தொழில்நுட்பம் மற்றும் பிற தொழில்நுட்பங்களில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படும்.

இன்று நாங்கள் உத்திசார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உறவை உருமாற்றுதல் என்பதை ஒத்துக் கொண்டுள்ளோம். இதன் கீழ், முக்கியமான கனிமங்கள், அதி நவீன பொருட்கள் மற்றும் மருந்துகளின் வலுவான விநியோகச் சங்கிலிகளை உருவாக்குவதற்கு முக்கியத்துவம் தரப்படும். லித்தியம் மற்றும் அரிய மண் போன்ற கனிமங்களுக்கான மீட்பு மற்றும் செயலாக்க முயற்சியைத் தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

விண்வெளித் துறையில் அமெரிக்காவுடன் எங்களுக்கு நெருக்கமான ஒத்துழைப்பு உள்ளது. இ‍ஸ்ரோ மற்றும் நாசாவுடன் இணைந்து உருவாக்கப்பட்ட நிசார் செயற்கைக்கோள், விரைவில் இந்திய ஏவுகணை வாகனத்தில் இருந்து விண்வெளிக்குச் செல்லும்.

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான கூட்டாண்மையானது ஜனநாயகம் மற்றும் ஜனநாயக மதிப்புகள், அமைப்புகளை ஆதரிக்கிறது. இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் செழிப்பை மேம்படுத்த நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம். இதில் குவாட் என்ற நால்தரப்பு பாதுகாப்பு பேச்சு வார்த்தை சிறப்புப் பங்கை வகிக்கும்.

இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டில், புதிய பகுதிகளில் கூட்டாண்மை நாடுகளுடன் ஒத்துழைப்பை அதிகரிப்போம். ஐஎம்இசி( “IMEC”) மற்றும் ஐ2யு2( “I2U2”) முன்முயற்சியின் கீழ், பொருளாதார வழித்தடங்கள் மற்றும் இணைப்பு உள்கட்டமைப்பில் நாங்கள் இணைந்து செயல்படுவோம்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவும், அமெரிக்காவும் உறுதியாக இணைந்துள்ளன. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஒழிக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை அவசியம் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.

2008-ம் ஆண்டு இந்தியாவில் படுகொலைகளை நிகழ்த்திய குற்றவாளியை இப்போது இந்தியாவிடம் ஒப்படைக்க அதிபர் முடிவு செய்ததற்கு நான் அவருக்கு நன்றி கூறுகிறேன். இந்திய நீதிமன்றங்கள் இப்போது பொருத்தமான நடவடிக்கை எடுக்கும்.

அமெரிக்காவில் உள்ள இந்திய சமூகம் எங்கள் உறவில் ஒரு முக்கிய இணைப்பாகும். நமது இருநாட்டு மக்களுக்கு இடையிலான உறவை வலுப்படுத்த, விரைவில் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் பாஸ்டனில் புதிய இந்திய தூதரகங்களைத் திறப்போம்.

இந்தியாவில் கடல் கடந்த கல்வி வளாகங்களைத் திறக்க அமெரிக்க பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை நாங்கள் அழைத்துள்ளோம்.

அதிபர் ட்ரம்ப் அவர்களே, இந்தியாவுடனான உங்கள் நட்புக்கும் உறுதியான அர்ப்பணிப்புக்கும் நான் நன்றி கூறுகிறேன். 2020 -ம் ஆண்டின் உங்கள் வருகையை இந்திய மக்கள் இன்னும் நினைவில் வைத்திருக்கிறார்கள், மேலும், அதிபர் ட்ரம்ப் மீண்டும் வருவார் என்று நம்புகிறார்கள். 1.4 பில்லியன் இந்தியர்களின் சார்பாக, உங்களை இந்தியாவுக்கு வருமாறு அழைக்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.