புதுடெல்லி: “அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டு இன்று இந்தியாவுக்கு வர இருப்பவர்களின் கைகள் விலங்கிடப்பட்டும், கால்கள் சங்கிலிகளால் கட்டப்பட்டும் இருக்குமா? இது இந்திய ராஜதந்திரத்துக்கு ஒரு சோதனை” என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “சட்டவிரோதமாக குடியேறியவர்களை திரும்ப அழைத்து வரும் 2-வது அமெரிக்க விமானத்தின் மீதே அனைவரின் பார்வையும் இருக்கும். நாடுகடத்தப்பட்டவர்கள், கைவிலங்கிடப்பட்டு, அவர்களின் கால்கள் சங்கிலிகளால் கட்டப்படுமா? இது இந்திய ராஜதந்திரத்துக்கு ஒரு சோதனை,” என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த 119 இந்தியர்கள் விமானப் படைக்கு சொந்தமான 2 விமானங்களில் நாடு கடத்தப்படுகின்றனர். இந்த 2 விமானங்கள் 119 இந்தியர்களையும் ஏற்றிக்கொண்டு இன்று இரவு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள குரு ராம் தாஸ் சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படுபவர்களில் அதிகபட்சமாக 67 பேர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள். இதனைத் தொடர்ந்து ஹரியாணா (33), குஜராத் (8), உத்தர பிரதேசம் (3), மகாராஷ்டிரா (2), கோவா (2), ராஜஸ்தான் (2) இமாச்சல் மறறும ஜம்மு-காஷ்மீர் (தலா ஒருவர் ) ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, 104 இந்தியர்கள் அடங்கிய முதல் குழு, அமெரிக்காவில் இருந்து கடந்த 5-ம் தேதி அமிர்தசரஸ் நகருக்கு வந்தது. அவர்கள் கைவிலகிடப்பட்டும், கால்களில் சங்கிலியால் கட்டப்பட்டும் கொண்டுவரப்பட்டனர். இது தேசிய அளவில் மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், பிரதமர் மோடி தனது அமெரிக்க அரசுமுறைப் பயணத்தை நிறைவு செய்ததன் பின்னணியில் இன்று இரண்டாவது குழு வர உள்ளதால் அவர்கள் எவ்வாறு அழைத்து வரப்படுவார்கள் என்ற கேள்வி முக்கியத்துவம் பெற்றுள்ளது.