தென்மேற்கு பாகிஸ்தானில் நேற்று நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 10 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம், ஹர்னாய் மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட சுரங்கத் தொழிலாளர்கள் நேற்று பொருட்கள் வாங்க கடைத்தெருவுக்கு சென்றுவிட்டு, தங்கள் பணியிடத்துக்கு ஒரு வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் வாகனம் சாலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டில் சிக்கியது. இதில் வாகனம் வெடித்து சிதறியதில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. என்றாலும் பலுசிஸ்தானில் பலூச் விடுதலைப் படை என்ற தீவிரவாத அமைப்பு பாதுகாப்பு படையினர் மற்றும் பலூச் அல்லாதவர்களை, குறிப்பாக பஞ்சாபிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த அமைப்பே இந்த தாக்குதலையும் நடத்தியிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.