புதுடெல்லி: மகா கும்பமேளாவுக்கு செல்ல தலைநகர் டெல்லியில் உள்ள புதுடெல்லி ரயில் நிலையத்தில் சனிக்கிழமை (பிப்.15) அன்று கூட்டம் அலைமோதிய காரணத்தால் சுமார் சுமார் 15 பேர் காயமடைந்துள்ளனர். மூச்சுத்திணறல் காரணமாக 4 பெண்கள் மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரவு சுமார் 10 மணி அளவில் மகா கும்பமேளாவுக்கான ரயிலை பிடிக்க அதிகளவில் மக்கள் நடைமேடை 13 மற்றும் 14-ல் திரண்டனர். அதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் பயணிகளும் பீதி அடைந்தனர். கூட்ட நெரிசல் காரணமாக அதில் சிக்கியவர்களுக்கு மூச்சுத்திணறல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்துக்கு விரைந்த ரயில்வே போலீஸார், காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் சென்றனர். அங்குள்ள சூழலை கருத்தில் கொண்டு ஆம்புலன்ஸ் வாகனங்களும் சென்றன. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பேர் நடைமேடையில் கூடியது தான் கூட்ட நெரிசல் ஏற்பட காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 1,500 முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்டுகள் விற்பனையானதும், ஸ்வதந்த்ரதா சேனானி எக்ஸ்பிரஸ் மற்றும் புவனேஷ்வர் ராஜ்தானி ஆகிய ரயில்கள் தாமதமாக வந்ததும் இதற்கு காரணம் என ரயில்வே துணை போலீஸ் கமிஷனர் கே.பி.எஸ் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
தற்போது புதுடெல்லி ரயில் நிலையத்தில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாகவும். நெரிசலை தவிர்க்க சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்துள்ளதாகவும், அங்கு கூடுதல் ரயில்களை இயக்க ரயில்வே தயார் என்றும், இந்த சம்பவம் குறித்து முறையான விசாரணை மேற்கொள்ளப்படும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.