வாஷிங்டன்: பிரதமர் மோடி-அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சந்திப்பில், வரும் 2030-க்குள் இருதரப்பு வர்த்தகத்தை ரூ. 43.43 லட்சம் கோடியாக (500 பில்லியன் டாலர்) அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாள் பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த சந்திப்பு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப் உடனான சந்திப்பு மிகச் சிறந்ததாக இருந்தது. எங்கள் பேச்சுவார்த்தைகள் இந்தியா-அமெரிக்கா நட்புறவுக்கு குறிப்பிடத்தக்க உத்வேகத்தை அளிக்கும்!
அதிபர் ட்ரம்ப் அடிக்கடி MAGA பற்றிப் பேசுகிறார். வளர்ச்சி அடைந்த பாரதத்தை நோக்கி நாங்கள் பணியாற்றி வருகிறோம். அமெரிக்க சூழலில் இதை MIGA (‘மேக் இந்தியா கிரேட் அகெய்ன்’) என மொழிபெயர்க்கலாம். இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து, செழிப்புக்காக ஒரு MEGA கூட்டாண்மையைக் கொண்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.
2030 ஆம் ஆண்டுக்குள் அமெரிக்காவுடனான வர்த்தகத்தை இரட்டிப்பாக்க இந்தியா இலக்கு வைத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். போர் விமானங்கள் உட்பட அமெரிக்க பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவதை அதிகரிக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள ட்ரம்ப், இந்தியாவின் முன்னணி எண்ணெய் மற்றும் எரிவாயு சப்ளையராக அமெரிக்கா திகழும் என்றும் கூறினார்.
அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாகக் கூறிய ட்ரம்ப், சில பொருட்களுக்கு விதிக்கப்படும் வரி காரணமாக அவற்றை ஏற்றுமதி செய்வது சாத்தியமற்றதாக உள்ளதாகத் தெரிவித்தார். “இந்தியா பல பொருட்களுக்கு 30, 40, 60, மற்றும் 70 சதவீத வரிகளை விதிக்கிறது. சில சந்தர்ப்பங்களில், அதை விட மிக அதிகமாகவும் வரி விதிக்கப்படுகிறது. உதாரணமாக, இந்தியாவிற்குள் நுழையும் அமெரிக்க கார்களுக்கு 70 சதவீத வரி விதிக்கப்பட்டால், அந்த கார்களை விற்பனை செய்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.
இன்று, இந்தியாவுடனான அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறை கிட்டத்தட்ட 100 பில்லியன் டாலர்களாக உள்ளது. இந்த நீண்டகால ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்ய பிரதமர் மோடியும் நானும் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டுள்ளோம்” என தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது, வரும் 2030க்குள் இருதரப்பு வர்த்தகத்தை ரூ. 43.43 லட்சம் கோடியாக (500 பில்லியன் டாலர்) அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை தெரிவித்துள்ள பிரதமர் அலுவலகம், “இதன்மூலம் இருதரப்பு வர்த்தகம் தற்போதுள்ளதைவிட இரு மடங்காக உயரும். இதற்காக, இருதரப்பு வர்த்தகத்திற்கான ஒரு புதிய தைரியமான இலக்கை தலைவர்கள் நிர்ணயித்துள்ளனர்.
இந்த அளவிலான லட்சியத்திற்கு புதிய, நியாயமான வர்த்தக விதிமுறைகள் தேவைப்படும் என்பதால், 2025 இலையுதிர்காலத்தில் பரஸ்பர நன்மை பயக்கும், பல துறை இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் (BTA) முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தும் திட்டங்களை தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கும், வர்த்தக உறவை உறுதி செய்வதற்கும் மூத்த பிரதிநிதிகளை நியமிப்பதற்கு தலைவர்கள் உறுதியளித்தனர். அமெரிக்காவும் இந்தியாவும் பொருட்கள் மற்றும் சேவைகள் துறை முழுவதும் இருதரப்பு வர்த்தகத்தை வலுப்படுத்தவும் ஆழப்படுத்தவும் ஒருங்கிணைந்த அணுகுமுறை மேற்கொள்ளப்படும். மேலும், சந்தை அணுகலை அதிகரிப்பதற்கும், வரி மற்றும் வரி அல்லாத தடைகளை குறைப்பதற்கும், விநியோகச் சங்கிலி ஒருங்கிணைப்பை ஆழப்படுத்துவதற்கும் அதிகாரிகள் குழு பாடுபடும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.