புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் வல்லநாட்டு செட்டியார் சமூகத்தினர் உள்ளனர். இந்த சமூகத்தினர் மேல்முகம் என்ற மேல சீமை, நடுமுகம் என்ற நடுசீமை, கீழ முகம் என்ற கீழ சீமை என்று பல்வேறு பகுதிகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் குறிப்பாக, மேல சீமையில் உள்ளவர்கள் கீரனூர், ஆரியூர், அன்னவாசல், வல்லநாடு உள்ளிட்ட பகுதிகளிலும், நடு சீமையில் உள்ளவர்கள் ஆலங்குடி, மறமடக்கி, வடகாடு, கரம்பக்குடி போன்ற பகுதிகளிலும், கீழ சீமையில் உள்ளவர்கள் நெடுவாசல், நெய்வேலி, பிலாவிடுதி, காடுவெட்டிவிடுதி ஆகிய பகுதிகளிலும் வசித்து வருகின்றனர். மேலும், மொத்தம் மூன்று சீமைகளிலும் உள்ளவர்கள் 12 ஊர்களில் வசித்து வருகின்றனர்.

இந்த 12 ஊர்களில் இருந்தும் இந்த சமூகத்தைச் சேர்ந்த பலர் திருச்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வர்த்தக ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் பணி செய்யவும் இடம்பெயர்ந்து சென்று அங்கேயே வசித்தும் வருகின்றனர்.
இந்நிலையில், திருவரங்குளம் வல்லநாட்டு செட்டியார் சமூகத்தினர் தைப்பூச நாளை விமர்சியாக கொண்டாடும் வகையில் தைப்பூசத்திற்கு முதல் நாளிலிருந்து தைப்பூசம் முடிந்து மறுநாள் வரை மூன்று தினங்கள் பழனியில் தங்கி பல்வேறு கட்ட நிகழ்ச்சிகளை நடத்தி சாமி தரிசனமும் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அதேபோல், இந்த ஆண்டும் சுமார் 300-க்கும் மேற்பட்ட திருவரங்குளம் வல்லநாட்டு செட்டியார் சமூகத்தினர் பழனிக்கு சென்று தைப்பூசத்தை விமர்சையாக கொண்டாடியுள்ளனர்.
இந்நிலையில் தான், இவர்கள் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் அன்னதானம் சமைத்து வழங்கும்போதும், சாமி தரிசனம் உள்ளிட்டவற்றை செய்யும் பொழுதும் ஒவ்வொரு எலுமிச்சம்பழம் வைத்து பூஜை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில், இந்த ஆண்டும் அதேபோல் ஒவ்வொரு எலுமிச்சம் பழம் வைத்து பூஜை செய்த நிலையில் அந்த எலுமிச்சம் பழத்தை பழனியில் பெரியநாயகி அம்பாள் கோயில் அருகே உள்ள திருவரங்குளம் வல்லநாட்டு நகரத்தாருக்கு சொந்தமான பொது மடத்தில் வைத்து ஏலம் விட்டுள்ளனர். இந்த ஏலத்தில் அதே திருவரங்குளம் வல்லநாட்டு செட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் கலந்து கொண்டு பழங்களை ஏலம் எடுத்துள்ளனர்.

குறிப்பாக, காலைஉணவு, இரவு உணவு மதிய உணவு உள்ளிட்ட உணவு சமைத்து அன்னதானம் செய்யப்படும் போது செய்யப்பட்ட பூஜையில் வைக்கப்பட்ட ஒவ்வொரு எலுமிச்சம் பழமும் ரூ.16,000 முதல் ரூ.40,000 வரை ஏலம் போனது. இந்த சூழலில், இந்த ஏலத்தின் இறுதியாக தைப்பூச தினத்தன்று பழனி முருகன் திருவடியில் வைத்து பூஜை செய்த ஒரு அபிஷேக எலுமிச்சம் பழத்தை ஏலம் விட்ட நிலையில், அந்த எலுமிச்சம் பழத்தை தங்கள் வசப்படுத்திக்கொள்ள அந்த ஏலத்தில் கலந்து கொண்ட பலரும் ஒரு லட்சம், இரண்டு லட்சம், மூன்று லட்சம், நான்கு லட்சம் என ஏலம் கேட்டு வந்த நிலையில், இந்த ஏலத்தில் கலந்து கொண்ட ஒரு நபர் ரூ. 5,09,000 கொடுப்பதாக கூறி அந்த ஒரு எலுமிச்சம் பழத்தை ஏலத்தில் எடுத்து, மக்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.