கென்டகி,
அமெரிக்காவில் சக்தி வாய்ந்த குளிர்கால சூறாவளி தாக்குதல்கள் அவ்வப்போது ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், கென்டகி, ஜார்ஜியா உள்ளிட்ட மாகாணங்களில் ஏற்பட்ட சூறாவளி தாக்குதலில் பலர் சிக்கி கொண்டனர். கென்டகியில் 8 பேர் உள்பட இதுவரை மொத்தம் 9 பேர் பலியாகி உள்ளனர்.
இதுபற்றி கென்டகி மாகாண கவர்னர் ஆண்டி பெஷீர் கூறும்போது, கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு உள்ளனர். மற்றவர்களை தேடும் மற்றும் மீட்கும் பணியும் நடந்து வருகிறது என கூறியுள்ளார்.
சூறாவளி தாக்குதலால், டென்னஸ்ஸீ, கென்டகி மற்றும் விர்ஜீனியா உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் வெள்ளம் ஏற்பட்டு, வாகனங்கள் வெள்ள நீரில் மூழ்கி காணப்படுகின்றன. மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. வீடுகள், கட்டிடங்களை வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகிறது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.
கென்டகி மாகாணத்தில், வரலாறு காணாத வகையில் வெள்ளம் எதிரொலியாக நீர் மட்டம் உயர்ந்து உள்ளது என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது என்றும் கவர்னர் கூறியுள்ளார். தொடர்ந்து மாகாணத்திற்கு அவசரநிலை உத்தரவையும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் பிறப்பித்து உள்ளார். வருகிற நாட்களில் வெள்ளம் தொடரும் என்றும் பெஷீர் எச்சரித்து உள்ளார்.