இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்க அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட ரூ.182 கோடி நிதியுதவி ரத்து செய்யப்பட்டு உள்ளது.
அமெரிக்கா சார்பில் உலகம் முழுவதும் சுமார் 180 நாடுகளுக்கு ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளில் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஓராண்டில் சுமார் 68 பில்லியன் டாலரை அமெரிக்கா செலவிடுகிறது. இதில் உக்ரைன், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கு பெருமளவு நிதி வழங்கப்படுகிறது.
கடந்த ஜனவரி 20-ம் தேதி அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றார். அவர் பதவியேற்றவுடன், ‘அரசு செயல் திறன்’ என்ற புதிய துறை உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக தொழிலதிபர் எலன் மஸ்க் நியமிக்கப்பட்டார். இந்த புதிய துறை அமெரிக்க அரசின் செலவினங்களை குறைத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பல்வேறு நாடுகளுக்கு வழங்கப்பட்ட நிதியுதவி ரத்து செய்யப்படுவதாக டிஓடிஜி நேற்று அறிவித்தது. இதன்படி இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்க அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட ரூ.182 கோடி நிதியுதவி ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும் வங்கதேசத்தில் அரசியல் சூழலை வலுப்படுத்த ஒதுக்கப்பட்ட ரூ.251 கோடி நிதியுதவியையும் அமெரிக்க அரசு ரத்து செய்திருக்கிறது.
நிதியை பெற்றது யார்? – இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் ராஜீவ் சந்திரசேகர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க சுமார் ரூ.200 கோடியை வழங்கியதாக அமெரிக்க அரசு கூறுகிறது. இந்த நிதியை பெற்றவர்கள் யார் என்ற கேள்வி எழுகிறது. வங்கதேசம், நேபாளம் மற்றும் ஆசிய நாடுகளுக்கும் நிதியுதவி வழங்கப்பட்டிருக்கிறது. பல்வேறு நாடுகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் பின்னணியில் அமெரிக்க அரசு வழங்கிய பணம் இருப்பதாக சந்தேகம் எழுகிறது. இந்தியாவில் யாரெல்லாம் பணம் பெற்றனர் என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு: பாஜக மூத்த தலைவர் அமித் மாளவியா சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
கடந்த 2012-ம் ஆண்டில் தலைமை தேர்தல் ஆணையராக குரேஷி பதவி வகித்தார். அப்போது அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸின் அறக்கட்டளையுடன் குரேஷி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். சோரஸின் அறக்கட்டளைக்கு அமெரிக்க அரசே பெருமளவில் நிதியுதவி வழங்கி வருகிறது.
காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது தேச நலனுக்கு எதிரான சக்திகள் மத்திய அரசின் அமைப்புகளில் ஊடுருவின. இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க 21 மில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டிருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இந்த நிதியை பாஜக பெறவில்லை. அப்படியென்றால் அமெரிக்காவின் நிதியுதவியை பெற்றது யார்? இவ்வாறு அமித் மாளவியா கேள்வி எழுப்பி உள்ளார்.
பாஜக வட்டாரங்கள் கூறும்போது, “சிஏஏ சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள், விவசாயிகள் போராட்டங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி கிடைப்பதாக நீண்டகாலமாக புகார்கள் கூறப்பட்டு வருகின்றன. அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன் ஆட்சிக் காலத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக காய்கள் நகர்த்தப்பட்டன. அந்த உண்மை இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது” என்று தெரிவித்தன.