இந்திய அணி பிளேயிங் லெவன்: கம்பீர் ஆதரவு வீரருக்கு இடமில்லை; ரோஹித் நம்பும் முக்கிய வீரர்

Team India: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் 2025 (ICC Championship Trophy 2025) வரும் பிப். 19ஆம் தேதி (நாளை மறுநாள்) தொடங்க உள்ளது. இந்தியா விளையாடும் போட்டிகள் தவிர அனைத்து போட்டிகளும் பாகிஸ்தானின் லாகூர், ராவில்பிண்டி மற்றும் கராச்சி உள்ளிட்ட 3 நகரங்களில் நடைபெறுகின்றன. இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற இருக்கின்றன.

முதல் பிரிவில் இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கேதசம் மற்றும் இரண்டாவது பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. ஒரு பிரிவில் இருக்கும் அணி, மற்ற 3 அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும். குரூப் சுற்று முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்த 4 அணிகள் அரையிறுதி சுற்றுக்குச் செல்லும். மார்ச் 9ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெறும்.

Team India: ரிஷப் பண்டுக்கு காயம்

அந்த வகையில், இந்திய அணியின் (Team India) 15 வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாகக் குழுவினர் கடந்த பிப். 15ஆம் தேதி துபாய் (Dubai) சென்றனர். இந்திய அணி தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், ரிஷப் பண்ட் காயத்தில் (Rishabh Pant Injury) சிக்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் கேஎல் ராகுலுக்கு பேக்அப் வீரர்தான் என்பதால் முதற்கட்ட பிளேயிங் லெவனில் இந்திய அணிக்கு பிரச்னை இல்லை எனலாம். ஒருவேளை காயம் குணமாகாவிட்டால் மாற்று வீரர்கள் உள்ளே வரலாம்.

Team India: டாஸ் முக்கிய அமைச்சரே…

இது ஒருபுறம் இருக்க இந்திய அணி முதல் போட்டியில் வங்கதேசத்தை வரும் பிப். 20ஆம் தேதி அன்றும், பாகிஸ்தான் அணியுடன் 23ஆம் தேதி அன்றும், நியூசிலாந்து அணியுடன் மார்ச் 2ஆம் தேதி அன்றும் லீக் போட்டிகள் நடைபெறும். அனைத்து போட்டிகளும் துபாயில் நடைபெற இருக்கும் நிலையில், இந்திய அணி டாஸை வெல்வது மிக மிக முக்கியம். டாஸ் வென்று முதலில் பந்துவீசும் அணியே வெற்றி பெற அதிக வாய்ப்பிருக்கிறது. காரணம், இரவுப்பொழுதில் பேட்டிங்கிற்கு ஆடுகளம் அதிகம் சாதகமாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.

Team India: பும்ரா இல்லாதது பெரிய பின்னடைவு

அப்படியிருக்க, இந்திய அணி அதன் பிளேயிங் லெவனை அனுபவமிக்கதாகவும், வலுவாகவும் கட்டமைக்க விரும்பும். இங்கிலாந்தை சொந்த மண்ணில் வென்றதை போல, மற்ற அணிகளை துபாயில் வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல. எனவே பிளேயிங் லெவனை பலமாக கட்டமைக்க வேண்டும் ஜஸ்பிரித் பும்ரா (Jasprit Bumrah) இல்லாதது பெரிய பின்னடைவு ஆகும். இந்திய அணியின் பேட்டிங்கை விட பந்துவீச்சில் என்ன மாற்றம் இருக்கப்போகிறது என்பதுதான் பலரின் கேள்வியாக உள்ளது.

Team India: முதல் 8 வீரர்களில் மாற்றமே இருக்காது

அதாவது, ரோஹித் சர்மா (Rohit Sharma), சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் பிளேயிங் லெவனில் நிச்சயம் இடம்பிடிப்பார்கள். இதில் பாண்டியா, அக்சர் பட்டேல், ஜடேஜா என மூன்று பந்துவீச்சு ஆப்ஷன்கள் வந்துவிடுகின்றன. மீதம் உள்ள மூன்று இடத்தில் இந்திய அணி 1 ஸ்பின்னர், 2 வேகப்பந்துவீச்சாளர்கள் அல்லது 2 ஸ்பின்னர், 1 வேகப்பந்துவீச்சாளருடன் களமிறங்க வாய்ப்புள்ளது. 90% 1 ஸ்பின்னர் மற்றும் 2 வேகப்பந்துவீச்சாளர்கள் என்பதற்கே வாய்ப்புள்ளது. 

Team India: குல்தீப் யாதவ் vs வருண் சக்ரவர்த்தி

சுழற்பந்துவீச்சில் குல்தீப் யாதவா (Kuldeep Yadav) அல்லது வருண் சக்ரவர்த்தியா (Varun Chakaravarthy) என்ற கேள்வி இருக்கிறது. ஜடேஜா, அக்சர் பட்டேல் என இரண்டு விரல் ஸ்பின்னர்கள் இருப்பதால் வேரியேஷனுக்காக மணிக்கட்டு ஸ்பின்னர் என்ற ரீதியில் தொடக்கக் கட்டத்தில் குல்தீப் யாதவ் களமிறங்க வாய்ப்புள்ளது. ஒருவேளை அவர் சொதப்பினால் அடுத்தடுத்த போட்டிகளில் வருண் வரலாம். இருவரில் யார் விளையாடினாலும் இந்திய அணிக்கு பிரச்னை இல்லை.

Team India: ஹர்ஷித் ராணாவுக்கு ரெஸ்ட் 

வேகப்பந்துவீச்சில் முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங் ஆகியோரே நிச்சயம் விளையாடுவார்கள் எனலாம். காரணம், இருவரும் ஆட்டத்தின் மூன்று கட்டங்களில் பந்துவீசுவதற்கு ஏதுவானவர்கள், எனவே கம்பீர் (Gautam Gambhir) ஆதரவு பெற்ற வேகப்பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணாவுக்கு (Harshit Rana) பிளேயிங் லெவனில் இடம் இருக்காது. ஏனென்றால் அவர் பழைய பந்தில் நன்றாக வீசுகிறார். இருப்பினும் புது பந்தில் அந்தளவிற்கு தாக்கம் இல்லை. 

அர்ஷ்தீப் சிங் தான் ரோஹித் சர்மாவின் நம்பிக்கை பெற்ற வீரராக உள்ளார். எனவே, முகமது ஷமி – அர்ஷ்தீப் சிங் கூட்டணியே முதன்மையான பிளேயிங் லெவனில் இடம்பெறும் என கூறப்படுகிறது.    

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.