“உக்ரைன் பங்கேற்பு இல்லாத ஒப்பந்தங்களை அங்கீகரிக்க மாட்டோம்” – ஜெலென்ஸ்கி திட்டவட்டம்

கீவ்: உக்ரைனின் பங்கேற்பு இல்லாமல் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்களை நாங்கள் அங்கீகரிக்க மாட்டோம் என்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புதினுடன் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த வாரம் தொலைபேசியில் பேசியதை அடுத்து, இரு நாடுகளின் உயர்மட்ட குழுக்களின் சந்திப்பு நாளை (பிப்.18) சவூதி அரேபிய தலைநகரில் நடைபெற உள்ளது. ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தலைமையிலான ரஷ்ய குழுவும், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தலைமையிலான அமெரிக்க குழுவும் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க இருக்கின்றன.

இந்தப் பேச்சுவார்த்தை தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், “அமெரிக்க – ரஷ்ய உறவுகளை மீட்டெடுப்பது, உக்ரைன் பிரச்சினைக்கான தீர்வுகள் குறித்து ஆலோசிப்பது, இரு நாடுகளின் அதிபர்களின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்வது ஆகியவை குறித்து இந்த பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இன்று (பிப்.17) பத்திரிகையாளர்களிடம் பேசிய உக்ரைன் ஜெலென்ஸ்கி, “இந்தப் பேச்சுவார்த்தை தொடர்பாக எங்களுக்கு எதுவும் தெரியாது. இதில், உக்ரைன் பங்கேற்கவில்லை. உக்ரேனிய அதிகாரிகள் யாரும் இல்லாத நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை எந்த முடிவுகளையும் தராது. வரும் 19-ம் தேதி நான் சவுதி அரேபியாவுக்கு பயணம் செய்கிறேன். ஆனால், அந்தப் பயணம் அமெரிக்க – ரஷ்யா பேச்சுவார்த்தைகளுடன் தொடர்பில்லாதது” என தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.