புதுடெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையராக தான் இருந்தபோது தேர்தல் ஆணையம், அமெரிக்காவிடம் இருந்து எவ்வித நிதி உதவியையும் பெறவில்லை என்று எஸ்.ஒய்.குரேஷி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதை அடுத்து, தொழிலதிபர் எலான் மஸ்க் தலைமையில் ‘அரசு செயல் திறன்'(டிஓடிஜி) என்ற புதிய துறை உருவாக்கப்பட்டது. இந்த துறை அமெரிக்க அரசின் செலவினங்களை குறைத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பல்வேறு நாடுகளுக்கு வழங்கப்பட்ட நிதியுதவி ரத்து செய்யப்படுவதாக டிஓடிஜி நேற்று அறிவித்தது. இதன்படி இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்க அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட ரூ.182 கோடி ($21 மில்லியன்) நிதியுதவி ரத்து செய்யப்பட்டுள்ளதாக டிஓடிஜி தெரிவித்திருந்தது.
எனினும், இந்த தொகை இந்தியாவில் எந்த அமைப்புக்கு வழங்கப்பட்டது என்பது தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் அமித் மாளவியா சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், கடந்த 2012-ம் ஆண்டில் தலைமை தேர்தல் ஆணையராக குரேஷி பதவி வகித்தார். அப்போது அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸின் அறக்கட்டளையுடன் குரேஷி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். சோரஸின் அறக்கட்டளைக்கு அமெரிக்க அரசே பெருமளவில் நிதியுதவி வழங்கி வருகிறது.
காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது தேச நலனுக்கு எதிரான சக்திகள் மத்திய அரசின் அமைப்புகளில் ஊடுருவின. இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க 21 மில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டிருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இந்த நிதியை பாஜக பெறவில்லை. அப்படியென்றால் அமெரிக்காவின் நிதியுதவியை பெற்றது யார்?” என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்நிலையில், குரேஷி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவுகளில், “நான் தலைமை தேர்தல் ஆணையராக இருந்தபோது, இந்திய தேர்தல் ஆணையம், இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதற்காக ஒரு அமெரிக்க நிறுவனத்தின் சில மில்லியன் டாலர் நிதியுதவியை பெறுவதற்கு ஏற்ப ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக ஊடகங்களின் ஒரு பிரிவில் வெளியான செய்தியில் சிறிதும் உண்மை இல்லை.
நான் தலைமை தேர்தல் ஆணையராக இருந்தபோது, 2012 இல் IFES உடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் இருந்தது. அதேபோல் இந்திய தேர்தல் ஆணையத்தின் பயிற்சி மற்றும் வள மையமான IIIDEM மூலம் விருப்பமுள்ள நாடுகளுக்கு பயிற்சி அளிக்க பல நிறுவனங்கள் மற்றும் தேர்தல் மேலாண்மை அமைப்புகளுடன் நாங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தோம்.
ஆனால், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நிதியுதவி அல்லது நிதி அளிப்பதாக வாக்குறுதி என எதுவும் இல்லை. உண்மையில், இருபுறமும் எந்தவொரு நிதி மற்றும் சட்டப்பூர்வ கடமையும் இருக்காது என்பதை புரிந்துணர்வு ஒப்பந்தம் தெளிவுபடுத்தியது.
எந்தவொரு தெளிவின்மைக்கும் இடமளிக்காதபடி இந்த நிபந்தனைகள் இரண்டு வெவ்வேறு இடங்களில் செய்யப்பட்டன. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்துடன் தொடர்புடைய எந்தவொரு நிதியையும் குறிப்பிடுவது முற்றிலும் தவறானது மற்றும் தீங்கிழைக்கும் செயல் என்று தெரிவித்துள்ளார். ஜூலை 30, 2010 முதல் ஜூன் 10, 2012 வரை தலைமை தேர்தல் ஆணையராக குரேஷி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.