சமீபத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது ஒரு வீரர் 250 கிலோவிற்கும் அதிகமாக பொருட்களை எடுத்து சென்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பிசிசிஐ தனது விதிகளில் அதிரடி மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இனி 150 கிலோவிற்கு மேல் கொண்டு செல்ல முடியாது என்று புதிய விதியை அறிமுகப்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கு பிறகு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) பல்வேறு புதிய விதிகளை அமல்படுத்தியது. அதில் ஒரு பகுதியாக வெளிநாட்டுப் பயணங்களின் போது வீரர்கள் எவ்வளவு எடையில் பொருட்களை கொண்டு செல்லலாம் என்பதில் புதிய விதியை அறிமுகப்படுத்தியது.
இது தொடர்பான அறிக்கைகளின்படி, பிசிசிஐ 150 கிலோ வரையிலான பொருட்களுக்கு மட்டுமே இனி செலவை ஏற்கும் என்று தெளிவுபடுத்தியுள்ளது. சில வீரர்கள் பிசிசிஐயின் தளர்வுகளை தவறாக பயன்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது இந்தியாவின் சீனியர் வீரர் ஒருவர் 27 பேக் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. அதில் அந்த வீரருக்கான உடைமைகள் மட்டுமின்றி அவரது குடும்பத்தினர் மற்றும் தனிப்பட்ட ஊழியர்களுக்கான உடமைகளும் இருந்துள்ளது. இதன் மொத்த எடை 250 கிலோவைத் தாண்டி உள்ளது. இதற்கான மொத்த தொகையையும் பிசிசிஐ தான் செலுத்தி உள்ளது.
பிசிசிஐ விதிகள் கூறுவது என்ன?
விளையாட்டு வீரர்களின் லக்கேஜ்களுக்கு பிசிசிஐ பணம் செலுத்தும். ஆனால் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தனிப்பட்ட ஊழியர்களின் லக்கேஜ்களுக்கு அவரவர்கள் தான் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற விதி முன்பு இருந்தே உள்ளது. ஆனால் அந்த வீரர் அனைத்து லக்கேஜ்களையும் தன்னுடைய கணக்கில் சேர்த்துள்ளார். ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் முழுவதும் அந்த குறிப்பிட்ட வீரரின் குடும்பத்தினர் அவருடன் சென்றதாகவும், அதற்கான மொத்த தொகையையும் பிசிசிஐ செலுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவற்றின் மொத்த மதிப்பு தெரியவில்லை என்றாலும், அதிகம் தான் என்று கூறப்படுகிறது.
Touchdown Dubai!#TeamIndia have arrived for #ChampionsTrophy 2025 pic.twitter.com/obWYScvOmw
— BCCI (@BCCI) February 15, 2025
அதிரடி முடிவு எடுத்து பிசிசிஐ
இது போன்ற தவறுகள் அடிக்கடி நடந்தால் மற்ற வீரர்களுக்கும் இதனை செய்ய வேண்டும் என்ற மனநிலை ஏற்படும். எனவே இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் பிசிசிஐ பல்வேறு விதிகளை கொண்டு வந்தது. அதன்படி இனி வீரர்கள் அணியுடன் மட்டுமே பயணிக்க வேண்டும் என்றும், தனிப்பட்ட வாகனங்களில் பயணிக்க கூடாது என்றும், வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் இனி அவர்களுடன் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் வர அனுமதி இல்லை என்றும், 150 கிலோவிற்கு மேல் லக்கேஜ் எடுத்து வர கூடாது போன்ற கடுமையான விதிகளை பிசிசிஐ கொண்டு வந்துள்ளது. அனைத்து வீரர்களுக்கும் இந்த விதிகள் பொருந்தும் என்பதை பிசிசிஐ தெளிவுபடுத்தி உள்ளது.