செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவ்வப்போது ஏதாவது புதுமையான விஷயங்கள் அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றன. ‘ப்ராம்ப்ட்’ எனப்படும் கட்டளைகளை ஏஐயிடம் சொன்னால் போதும் அது வாக்கியங்களை அமைப்பது, ஒளிப்படங்களை உருவாக்குவது எனத் தொடங்கி தற்போது வீடியோவையும் உருவாக்கித் தருகிறது.
அப்துல் கலாம் – ரத்தன் டாடா பேசிக் கொள்வது போலவும், ஹாலிவுட் படத்தில் ரஜினிகாந்த் நடிப்பது போலவும், பூனைக் கூட்டம் சுட்டித்தனம் செய்வது போலவும் எனக் கற்பனைக்கு எட்டும் விஷயங்களையெல்லாம் ஏஐயிடம் பேசி வீடியோக்களாக சமூக வலைதளங்களில் பலர் பகிர்ந்து வருகின்றனர்.
அப்படி, உலகப் பிரபலமான மார்வெல் – டிசி சூப்பர் ஹீரோக்களைப் போல இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களை வைத்து உருவாக்கப்பட்ட ஒரு வீடியோ அண்மையில் வைரலானது.
இது பலரது வரவேற்பைப் பெற்றிருந்தாலும் பார்ப்பதற்குத் தத்ரூபமாக உண்மையானது போன்று அவை காட்சியளிப்பதால் மெய்யையும் பொய்யையும் பிரித்துப் பார்ப்பதில் பயனர்கள் குழம்பிப் போனார்கள். நெட்டிசன்களில் சிலர் இத்தகைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஆதரவாகப் பேசினாலும், இன்னும் சிலர் இது அபாயகரமான போக்கு எனவும் வருத்தப்பட்டிருக்கிறார்கள்! – வசி