வாஷிங்டன்: பரஸ்பர அளவில் வரி விதிக்கும் அமெரிக்காவின் முடிவில் இந்தியாவுக்கு விலக்கு அளிக்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ள அதிபர் டொனால்டு ட்ரம்ப், இந்த விவகாரத்தில் யாரும் என்னுடன் வாதிட முடியாது என கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் எலான் மஸ்க் ஆகியோர் ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு கூட்டாக அளித்த பேட்டி செவ்வாய்க்கிழமை ஒளிபரப்பானது. அந்த நேர்காணலில், பிரதமர் மோடி உடனான சமீபத்திய சந்திப்பு குறித்தும், பரஸ்பர அளவிலான வரி விதிப்பு முறையில் இருந்து இந்தியாவுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் நிகழ்ச்சி தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த டொனால்டு ட்ரம்ப், “பிரதமர் மோடி இங்கே இருந்தார். அப்போது நான் அவரிடம் சொன்னேன், நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்றால், பரஸ்பர அளவிலான வரி விதிப்பு முறையை மேற்கொள்ள உள்ளோம். அமெரிக்க பொருட்களுக்கு நீங்கள் என்ன வரி விதித்தாலும், அதேபோன்ற வரி விதிப்பை நாங்கள் உங்கள் நாட்டின் பொருட்களுக்கு விதிப்போம் என்று சொன்னேன்
அவர் (மோடி) ‘இல்லை, இல்லை, அவ்வாறு வரி விதிப்பதை நான் விரும்பவில்லை’ என்று கூறினார். பதிலுக்கு நான், ‘இல்லை, இல்லை, நீங்கள் என்ன வரியை விதித்தாலும், நானும் அதேபோன்ற அளவுக்கு வரியை விதிக்கப் போகிறேன். நான் ஒவ்வொரு நாட்டிலும் அதைத்தான் செய்கிறேன்’ என்று கூறினேன். யாரும் என்னுடன் வாதிட முடியாது.
25% வரி விதிக்கப் போவதாக நான் சொன்னால், அவர்கள், ‘ஓ, அது பயங்கரமானது’ என்று சொல்வார்கள். நான் இனி அப்படிச் சொல்லப்போவதில்லை. ‘அவர்கள் என்ன வசூலித்தாலும், நாங்களும் அதே அளவு வசூலிப்போம்’ என்றுதான் நான் சொல்கிறேன்” என்றார் ட்ரம்ப்.