சென்னை: ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை அறிவித்த தமிழக அரசுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாய மக்களுக்கு தமிழக அரசு நிவாரணத் தொகை அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. அதன்படி மொத்தம் 5.18 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.498.80 கோடி ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பானது ஒட்டுமொத்த விவசாய மக்களின் வயிற்றில் பால்வார்க்கும் செய்தியாகும்.
விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை போன்ற பகுதிகளில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளையும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளையும் தேமுதிக சார்பாக சென்று பார்வையிட்டு தமிழக அரசிடம் நிவாரணத் தொகையை கட்டாயம் வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தினேன்.
இந்நிலையில், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நிவாரண தொகையை வழங்க இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அத்தொகையை உடனடியாக வங்கிக் கணக்குக்கு செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசுக்கு தேமுதிக சார்பில் மனமார்ந்த வாழ்த்துகள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.