சென்னை: ஒரே மாதத்தில் சுமார் 84 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளை இந்தியாவில் முடக்கி உள்ளது மெட்டா நிறுவனம். பயனர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதிக பயனர்களை கொண்டுள்ள சமூக வலைதளமாக அறியப்படுகிறது. வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் பல கோடி பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்தியாவில் ஒரே மாதத்தில் சுமார் 84 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளை தடை செய்துள்ளது மெட்டா நிறுவனம். தங்கள் சமூக வலைதளத்தில் உள்ள பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மெட்டா மேற்கொண்டு வருகிறது. அதன்படி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளுக்கு உட்பட்டு இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளது.
தடைக்கான காரணம் என்ன? வாட்ஸ்அப் சேவை விதிமுறை மீறல், சட்டவிரோத நடவடிக்கைகள், பயனர் புகார் போன்ற காரணங்களால் வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்யப்படுகின்றன. தற்போது தடை செய்யப்பட்டுள்ள 84 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் மீதான நடவடிக்கையில் 16 லட்சம் கணக்குகள் எந்தவித புகார் இன்றியும், 16 லட்சம் கணக்குகள் புகார் பெற்ற உடனும், மீதமுள்ள கணக்குகள் முறையான விசாரணைக்கு பிறகும் தடை செய்துள்ளது மெட்டா. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மெட்டா நிறுவனத்துக்கு கிடைத்த புகார்களில் அடிப்படையில் இந்த கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன.