திமுக-வில் அமைச்சர் செந்தில்பாலாஜி, அதிமுக-வில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பாஜக-வில் அண்ணாமலை, வானதி சீனிவாசன் ஆகிய ஆகப்பெரும் ஆளுமைகள் கோவையில் தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் நிலையில், ஆட்டோ ஓட்டுநரான பாபுவை கோவை புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளராக அறிவித்து திகைக்க வைத்திருக்கிறார் தவெக தலைவர் விஜய்.
கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த பாபு விஜய் ரசிகர் மன்றத்தில் சுறுசுறுப்பாக வலம் வந்தவர். அதுவே அவரை மாவட்டச் செயலாளர் அந்தஸ்துக்கு உயர்த்தி இருக்கிறது. இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’க்காக அவரிடம் பேசியதிலிருந்து…
இந்தப் பதவிக்கு எப்படி தேர்வானீர்கள்? – விஜய் நற்பணி மன்றத்தில் 25 ஆண்டுகளாக பயணித்து வருகிறேன். விஜய் பெயரில் 52 வாரங்கள் தொடர்ச்சியாக பல்வேறு சமூக சேவைகளை செய்து வந்தோம். ரத்த தானம் உள்ளிட்ட சமூக சேவைகளை செய்ததற்காக மூன்று விருதுகளை பெற்றுள்ளேன்.
விஜய் கையில் தங்கச் சங்கிலியை பரிசாகப் பெற்றேன். கரோனா தொற்று காலத்தில் கல்வி, மருத்துவ உதவிகளை செய்து வந்தேன். இதையெல்லாம் அங்கீகரிக்கும் விதமாகவே மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளேன்.
எளியவரான நீங்கள் மாவட்டச் செயலாளரானது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? – இதற்கு முன்பு மன்றத்தில் மாநகர தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளேன். இப்போது, தலைவர் விஜய் எளியவனையும் புகழடையச் செய்துள்ளார். அதற்காகப் பெருமைப்படுகிறேன். கார், வண்டி, பணம், காசு இருந்தால் தான் அரசியலில் ஜெயிக்க முடியும்
என்கிறபோது நீங்கள் எப்படிச் சமாளிப்பீர்கள்? – நான் ஏற்கெனவே மக்களோடு மக்களாய் கலந்துள்ளேன். மக்களுக்கு என்ன தேவை என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அவர்களுக்கான அடிப்படை வசதிகளை தெரிந்து பூர்த்தி செய்து தருவேன்.
கட்சியை வளர்க்க என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்? – அடித்தட்டு மக்களுக்கு என்ன தேவையோ அதை நிறைவேற்றுவேன். மக்களுக்கு சேவை செய்யும் போது கட்சியும் வளரும். ஏற்கெனவே மக்கள் தொடர்புடைய பணிகளை செய்துள்ளோம்.
போட்டிகள் நிறைந்த அரசியல் களத்தில் சமாளிக்க முடியும் என நம்புகிறீர்களா? – கட்சியை வளர்ப்பது என்பது ஒரு கூட்டு முயற்சி. தனியாக எதையும் செய்ய முடியாது. எங்கள் தலைவர் வகுத்துத் தரும் வியூகத்தின் படி செயல்படுவோம். என்னுடன் கட்சியைப் பலப்படுத்த நண்பர்கள் உள்ளனர். நாலு பேருக்கு டீ, காபி வாங்கித் தரவாவது கையில் கொஞ்சம் பணம்
வேண்டுமே… ஆட்டோ வருமானம் போதுமானதாக இருக்குமா? – எல்லா நேரங்களிலும் நான் மட்டுமே மொத்தமாகச் செலவு செய்வதில்லை. உடன் வரும் நண்பர்கள் செலவைச் சமமாக பகிர்ந்து கொள்கின்றனர். அதனால் எதையும் சமாளிப்போம்.
இந்த வருமானத்தில் குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு அரசியலையும் ஜெயிக்க முடியும் என நினைக்கிறீர்களா? – தலைவர் விஜய், “உன்னால் முடியும்” எனச் சொல்லி இருக்கிறார். ஆட்டோ டிரைவராகத் தான் வாழ்க்கையைத் தொடங்கி
னேன். அதில் கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தையும் கவனித்து வருகிறேன். நிச்சயம் அரசியலிலும் ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
பணமே பிரதானமான உலகில் பணமில்லாத அரசியல்வாதியை மக்கள் அங்கீகரிப்பார்கள் என நினைக்கிறீர்களா? – நான் ஆட்டோ டிரைவர் தான். ஆனால், மக்கள் என்னை ஆட்டோ டிரைவராகப் பார்க்கவில்லை; நல்ல மனிதராகப் பார்க்கின்றனர். ஆட்டோ ஓட்டி பல சமூக சேவைகளை செய்கிறீர்கள் என பாராட்டுகின்றனர். பணம் இல்லையென எங்கேயும் என்னை ஒதுக்கி வைத்தது கிடையாது. பணம் இல்லையே என்ற தாழ்வுமனப்பான்மையும் எனக்கு வந்தது கிடையாது.
மக்களுக்கு நீங்கள் தரும் வாக்குறுதி என்னவாக இருக்கும்? – மக்களுக்கு என்ன தேவையோ அதைச் செய்வோம். இப்போதைக்கு கட்சியின் அடிப்படை கட்டமைப்பை பலப்படுத்தி வருகிறோம். அடுத்த கட்டமாக கட்சியை வளர்ப்போம். மக்களுக்கு அரசின் சலுகைகளை பெற்று தர உதவி செய்வோம். கட்சி சார்பிலும் முடிந்த உதவிகளை மக்களுக்குச் செய்வோம். அனைத்துக்கும் மக்களோடு மக்களாக நின்று குரல் கொடுப்போம்.