மொழிப் பிரச்சினையில் அரசுப் பேருந்து நடத்துநரை தாக்கிய 4 பேர் கைது – கர்நாடக போலீஸ் நடவடிக்கை 

பெலகாவி: பயணிகளிடம் ஏற்பட்ட மொழிப் பிரச்சினையில் அரசுப் பேருந்து நடத்துநரைத் தாக்கியது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக கர்நாடக போலீஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் மகாராஷ்டிரா எல்லை அருகே உள்ள பெலகாவி மாவட்டத் தலைநகரில் வெள்ளிக்கிழமை நடந்துள்ளது.

நடந்த சம்பவம் குறித்து 51 வயதான நடத்துநர் மல்லப்பா ஹுக்கேரி கண்ணீருடன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சுலேபாவி கிராமத்தில் சிறுமி ஒருவர் தனது ஆண் நண்பருடன் பேருந்தில் ஏறினார். அவர் மராத்தியில் பேசினார். நான் ‘எனக்கு மராத்தி தெரியாது, கன்னடத்தில் பேசுங்கள்’ என்று கூறினேன். மராத்தி தெரியாது என்று சொன்னதும் என்னை அவமானப்படுத்திய அப்பெண், நான் கட்டாயம் மராத்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்றார். அப்போது திடீரென பலர் ஒன்று கூடி என்னை தலை முதல் கால் வரைத் தாக்கத் தொடங்கினர்” என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து காயமடைந்த அரசுப் பேருந்து நடத்துநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “நடத்துநர் தாக்கப்பட்டச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து நான்கு பேரை கைது செய்துள்ளோம். அவருக்கு எதிராக 14 வயது சிறுமி கொடுத்த மறுபுகாரின் அடிப்படையில் நடத்துநர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் அவர், நடத்துநர் தனக்கு எதிராக அவதூறு வார்த்தைகளைப் பயன்படுத்தினார் என்று குற்றஞ்சாட்டியுள்ளார். போக்சோ வழக்கு தொடர்பாக இன்னும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. நாங்கள் புகார் குறித்து கூடுதலாக விசாரணை செய்ய வேண்டியுள்ளது. அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

கர்நாடகா – மகாராஷ்டிரா எல்லையோரத்தில் இருக்கும் கர்நாடகாவுக்கு சொந்தமான பெலகாவி மாவட்டத்தில் மராத்தி பேசும் மக்கள் பெருமளவில் உள்ளனர். இவர்கள் பெலகாவியை மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர். இதற்கு அங்கு வசிக்கும் கன்னடம் பேசும் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.