அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு குற்றப்பத்திரிகை தாக்கல்

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், ஞானசேகரன் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு ஆன்லைன் வாயிலாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்ற வழிகாட்டுதல்படி 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் மாணவி பாலியல் விவகாரம் மற்றும் அது தொடர்பான முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) வெளியான விவகாரம் குறித்து தனித்தனியாக விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஞான சேகரன் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழுவினர் ஆன்லைன் வாயிலாக முதல்கட்ட குற்றப் பத்திரிகையை இன்று (பிப்.24) தாக்கல் செய்துள்ளனர். மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் ஞானசேகரனுக்கு மட்டுமே தொடர்பு உள்ளது என அந்த குற்றப்பத்திரிகையில் போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், ஞானசேகரனின் செல்போன் உரையாடல்கள் அனைத்தும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக ஞானசேகரன் செல்போனில் பேசிய ஆடியோ ஆதாரங்களை, உறுதி செய்யும் வகையில் அவருக்கு சென்னை மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் எதிரே உள்ள அரசு தடயவியல் துறை கூடத்தில் 3 மணி நேரம் குரல் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்ந்து அவருக்கு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ரத்த பரிசோதனை நடத்தப்பட்டது. குரல் பரிசோதனை போன்று ரத்த பரிசோதனையும் பாலியல் வன்கொடுமை வழக்கில் முக்கிய தடயமாக பார்க்கப்படுகிறது. அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வரும் சிறப்பு புலனாய்வுக் குழு, மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தற்போது முதல்கட்ட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.