புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக ஆதிஷி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆம் ஆத்மி கட்சி நேற்று வெளியிட்டது.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தம் உள்ள 70 இடங்களில் பாஜக 48 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தது. பாஜக எம்எல்ஏ ரேகா குப்தா முதல்வராகப் பொறுப்பேற்றார்.
தேர்தலில் 22 இடங்களை மட்டுமே பெற்று ஆம் ஆத்மி ஆட்சியை இழந்தது. இந்நிலையில், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக. முன்னாள் முதல்வர் ஆதிஷி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆம் ஆத்மி கட்சி நேற்று வெளியிட்டது.
டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியில் மதுபான கொள்கை ஊழல் வழக்கில், அப்போதைய முதல்வர் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அதன்பின் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜாமீனில் வெளியில் வந்த கேஜ்ரிவால். முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்குப் பதில் ஆம் ஆத்மி மூத்த தலைவர் ஆதிஷியை (43) முதல்வராக்கினார். டெல்லியின் இளம் வயது முதல்வர் என்ற பெருமையுடன் செப்டம்பர் 21-ம் தேதி அவர் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.