டெல் அவில்: காசாவில் எந்த நேரத்திலும் மீண்டும் தாக்குதல் நடத்த இஸ்ரேல் படை தயாராக உள்ளது என்று அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ளது. இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தப்படி ஹமாஸ் இயக்கத்தினர் தங்கள் பிடியில் உள்ள இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுதலை செய்து வருகிறது. அதற்கு மாற்றாக இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்து வருகிறது. இதனிடையே, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக ஹமாஸும், இஸ்ரேலும் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டி கொள்கின்றனர்.
பாலஸ்தீன கைதிகள் 620 பேரையும் இஸ்ரேல் விடுதலை செய்யவில்லை. பாலஸ்தீனிய கைதிகளை விடுதலை செய்யாத நிலையில், இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக ஹமாஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. பாலஸ்தீனிய கைதிகளை விடுதலை செய்யாதவரை இஸ்ரேலுடன் போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதில்லை என்று ஹமாஸ் அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளது.
போர் நிறுத்த பேச்சுவார்த்தையை ஹமாஸ் ரத்து செய்துள்ள நிலையில், பாதுகாப்புப் படையினர் தயார் நிலையில் இருக்கும்படி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார். அவர், அதிகாரிகளுக்கான நிகழ்வு ஒன்றில் பேசுகையில், ‘காசா பகுதியில் எந்த நேரத்திலும் மீண்டும் சண்டையிட இஸ்ரேல் படை தயாராக இருக்கிறது.
ஹமாஸின் பெரும்பாலான படைகளை காசாவில் நாங்கள் ஒழித்துவிட்டோம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அதே நேரத்தில் பேச்சுவார்த்தை மூலமாகவோ அல்லது வேறு வழிகளிலோ போரின் நோக்கத்தை நிறைவேற்ற தயாராக இருக்கிறோம்” என்றார். இதனால், காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் மீண்டும் போரை தொடங்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.