“யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை” – தெலங்கானா சுரங்க விபத்து குறித்து அமைச்சர் கவலை

ஹைதராபாத்: சுரங்க இடிபாடுகளில் சிக்கியவர்கள் 8 பேரும் உயிர் பிழைத்திருப்பதற்கான வாய்ப்பு மிக மிக மிக குறைவு என்று தெலங்கானா அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாநிலம், நாகர்கர்னூல் மாவட்டம் தோமலபெண்டாவில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (எஸ்எல்பிசி)யில் கட்டுமான வேலை நடந்து வந்த சுரங்கப் பாதையின் கூரை சனிக்கிழமை காலை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 8 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர். சுரங்கத்தின் 14-வது கிலோ மீட்டரில் சுமார் 3 மீட்டர் அளவுக்கு சுரங்கம் இடிந்துள்ளது.

மீட்பு பணிகளை விரைவுபடுத்துவதற்காக பிற மீட்பு குழுவினருடன் இணைந்து இந்திய ராணுவம் செயல்பட்டு வருகிறது. இடிபாடுகளில் சிக்கிய 8 பேரை மீட்கும் நடவடிக்கையில் உதவ இந்திய ராணுவத்தின் பைசன் பிரிவு பொறியாளர் பணிக்குழு இணைந்துள்ளது.

இந்த நிலையில், இடிபாடுகள் பகுதியில் தெலங்கானா அமைச்சர் கிருஷ்ண ராவ் பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், சுரங்கத்தில் சிக்கியவர்கள் உயிர் பிழைத்திருப்பதற்கான வாய்ப்பு மிக மிக மிக குறைவு. ஏனென்றால், நான் சுரங்கம் இடிந்த 50 மீட்டர் பகுதி வரை சென்றேன். நாங்கள் அதனை புகைப்படம் எடுத்தபோது, சுரங்கத்தின் முடிவே தெரியவில்லை.

மேலும் சுரங்கப்பாதையின் 9 மீட்டர் விட்டத்தில், கிட்டத்தட்ட 30 அடிக்கு 25 அடி வரை சேறு குவிந்துள்ளது. நாங்கள் அவர்களின் பெயர்களை சொல்லி சத்தமாக அழைத்தும் பார்த்தோம். எங்களுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. எனவே அவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை.” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.