100 நாள் வேலைத் திட்டத்தில் ரூ.3,300 கோடியை விடுவிக்க அமைச்சர் ஐ.பெரியசாமி வலியுறுத்தல்

திண்டுக்கல்: “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் ரூ.3,300 கோடி நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும்” என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் ஒரு கோடியே 9 லட்சம் தனிநபர்களுக்கு வேலை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 2024-25 ஆம் ஆண்டில் 20 கோடி மனித சக்தி நாட்கள் வேலை வழங்க மத்திய அரசால் அனுமதிக்கப்பட்ட நிலையில் இதுவரை 28.45 கோடி மனித சக்தி நாட்கள் பணி வழங்கப்பட்டுள்ளது. சமீப காலமாக மத்திய அரசு இத்திட்டத்துக்கான நிதி விடுவிப்பதில் தாமதம் செய்வதால் இத்திட்டப் பணியாளர்களுக்கு குறித்த காலத்தில் ஊதியம் வழங்குவது காலதாமதம் ஏற்படுகிறது.

தற்போதைய நிலையில் இத்திட்ட பணியாளர்களுக்கான ஊதிய நிலுவை ரூ.2,400 கோடியாகவும், திட்டத்தின் கீழ் கட்டப்படும் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுக்கான பொருட்கூறு நிலுவை ரூ.852 கோடியாகவும் உள்ளது. நிலுவையிலுள்ள திட்ட நிதியை விடுவிக்கக் கோரி தமிழக முதல்வர், பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் தமிழக நிதியமைச்சர் மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரை நேரில் சந்தித்து நிலுவையிலுள்ள நிதியை விரைவில் விடுவிக்க கோரிக்கை விடுத்துள்ளார். நிதி பெறப்பட்டதும் பணியாளர்களின் நிலுவை ஊதியம் அவர்களின் வங்கிக்கணக்குகளுக்கு நேரடியாக வரவு வைக்கப்படும்,” என தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.