ராவல்பிண்டி,
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேச அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். இந்த தொடரில் தற்போது வரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் குரூப் ஏ-வில் இருந்து இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
பாகிஸ்தான், வங்காளதேசம் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின. அதேசமயம், குரூப் பி-யில் இருந்து எந்த இரு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று ராவல்பிண்டியில் நடைபெறும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன.
தற்சமயம் அங்கு மழை பெய்வதன் காரணமாக டாஸ் போடுவதில் கூட தாமதம் ஏற்பட்டுள்ளது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் ஆட்டம் ரத்தாகவும் வாய்ப்பு உள்ளது. ஒருவேளை இந்த ஆட்டம் மழையால் கைவிடப்பட்டால் குரூப் பி-யில் அணிகளுக்கான அரையிறுதி வாய்ப்பு எவ்வாறு இருக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.
போட்டி மழையால் கைவிடப்பட்டால், ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு தலா ஒரு புள்ளி கிடைக்கும். ஏற்கனவே இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று 2 புள்ளிகளை பெற்றிருப்பதால் இது அவர்களுக்கு 3வது புள்ளியாக கிடைக்கும். ரன் ரேட் அடிப்படையில் தென் ஆப்பிரிக்கா (+2.140) முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா (+0.475) 2வது இடத்திலும் இருக்கும்.
இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் புள்ளிப்பட்டியலில் (இன்றைய போட்டி ரத்தானால்) 3வது மற்றும் 4வது இடத்தில் இருக்கும். இங்கிலாந்து அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் உள்ளன. ஆப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இரண்டிலும் வெற்றி பெற்றால், அவர்கள் 4 புள்ளிகளைப் பெறலாம். அப்படி நடந்தால் தென் ஆப்பிரிக்கா தொடரில் இருந்து வெளியேற்றக்கூடும். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
ஆப்கானிஸ்தானுக்கும் இன்னும் இரண்டு ஆட்டங்கள் உள்ளன. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டிலும் வெற்றி பெற்றால், அவர்களும் 4 புள்ளிகளைப் பெற முடியும். இதனால் ஆஸ்திரேலியா தொடரில் இருந்து வெளியேறும். ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இன்றைய போட்டி ரத்தானால் இந்த பிரிவில் இனிவரும் ஆட்டங்கள் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.