பிஹார் அமைச்சரவை விரிவாக்கம்: பாஜகவை சேர்ந்த 7 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு

பாட்னா: பிஹார் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவுபடுத்தப்பட்டு பாஜகவை சேர்ந்த 7 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் ஆரிஃப் முகமது கான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

பிஹாரில் 2005 முதல் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. 2005 முதல் 2013 வரை 8 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வராக ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் முதல்வராக பதவி வகித்தார். 2014 மே முதல் 2015 பிப்ரவரி வரை ஓராண்டுக்கும் குறைவான கால கடத்திற்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த ஜித்தன் ராம் மாஞ்சி முதல்வராக பதவி வகித்தார். பின்னர், 2015 நவம்பர் முதல் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிதிஷ் குமார் தொடர்ந்து முதல்வராக பதவி வகித்து வருகிறார்.

பாஜக கூட்டணியில் இருந்த நிதிஷ் குமார், பின்னர் லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து முதல்வர் பதவியை தக்க வைத்துக்கொண்டார். இந்நிலையில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து மீண்டும் முதல்வர் பதவியை தக்கவைத்துக்கொண்டார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற புதிய கூட்டணியின் பதவியேற்பு விழாவில், நிதிஷ் குமார் முதல்வராகவும், பாஜகவைச் சேர்ந்த சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா ஆகியோர் துணை முதல்வர்களாகவும் பதவியேற்றனர். நிதிஷ் குமார் அமைச்சரவை கடைசியாக மார்ச் 15, 2024 அன்று விரிவாக்கப்பட்டது. அப்போது 21 அமைச்சர்கள் சேர்க்கப்பட்டனர். நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த 9 பேர் மற்றும் பாஜகவைச் சேர்ந்த 12 பேர் அமைச்சர்களானார்கள்.

பிஹார் அமைச்சரவையின் தற்போதைய பலம் 30. இதில் பாஜகவின் 2 துணை முதல்வர்கள் உட்பட 15 அமைச்சர்கள் உள்ளனர். ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த 13 பேர் அமைச்சர்களாக உள்ளனர். மேலும், ஜித்தன் ராம் மாஞ்சி தலைமையிலான இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (எச்ஏஎம்) கட்சியைச் சேர்ந்த ஒருவர், சுமித் குமார் சிங் தலைமையிலான ஒரு சுயேச்சை ஆகியோர் அமைச்சர்களாக உள்ளனர். பிஹார் அமைச்சரவையில் அதிகபட்சம் 36 அமைச்சர்கள் இருக்கலாம்.

இந்நிலையில், இந்த ஆண்டு பிஹார் சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெற உள்ளதால், மாநில பாஜக தலைவரும் அமைச்சருமான திலீப் ஜெய்ஸ்வால் தனது பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார். இதையடுத்து, இன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில், ராஜு சிங், விஜய் சரவ்கி, ஜீவேஷ் மிஸ்ரா, விஜய் மண்டல், சுனில் குமார், மோதிலால் பிரசாத், கிருஷ்ண குமார் ஆகிய 7 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களுக்கு ஆளுநர் ஆரிஃப் முகமது கான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன்மூலம், ​​துணை முதல்வர்கள் இருவர் ​​உட்பட பாஜக சார்பில் 15 பேர் அமைச்சர்களாகி உள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.