மே 2-ம் தேதி கேதார்நாத் கோவில் நடை திறப்பு

ருத்ரபிரயாக்,

சிவபெருமானின் 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றாகக் கருதப்படும் கேதார்நாத் கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக வந்து ஈசனை தரிசித்துச் செல்கின்றனர். இமயமலைத் தொடரில் மந்தாகினி ஆற்றங்கரையில் அமைந்துள்ள கேதார்நாத் கோவில் குளிர்காலங்களைத் தவிர மீதமுள்ள ஆறு மாதங்கள் மட்டும் கோவில் நடை திறக்கப்பட்டிருக்கும்.

இந்த நிலையில், வரும் மே மாதம் 2-ம் தேதி காலை 7 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்படும் என்று பத்ரி-கேதார் கோவில் குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி விஜய் பிரசாத் தெரிவித்துள்ளார்.

கேதார்நாத் கோவில் திறப்பு அறிவிப்புடன், கர்வால் இமயமலையில் உள்ள நான்கு புனித தலங்களும் திறக்கப்படும் தேதிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி பத்ரிநாத் கோவில் மே 4-ம் தேதி திறக்கப்படுகிறது. அதே நேரத்தில் கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி கோவில்கள் ஏப்ரல் 30-ம் தேதி அக்ஷய திரிதியை அன்று திறக்கப்படுகிறது. இந்த நான்கு கோவில்களும் சேர்ந்து சோட்டா சார் தாம் என்ற ஒரு சிறிய யாத்திரை சுற்றுப் பாதையை உருவாக்குகின்றன.

கேதார்நாத் யாத்திரை என்பது இந்து மதத்தின் நான்கு மிக முக்கியமான யாத்திரைகளில் ஒன்றாகும். இது ஒட்டுமொத்தமாக சார் தாம் யாத்திரை அதாவது நான்கு புனித தலங்களுக்கான யாத்திரை என்று அழைக்கப்படுகிறது. அதன்படி இந்த பயணத்தில் கேதார்நாத் மட்டுமின்றி பத்ரிநாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய புனித தலங்களுக்கும் பயணிக்கலாம், இவை அனைத்தும் புனித கங்கை நதியின் கரையில் அமைந்துள்ளன.

இந்த யாத்திரைக்கான மிகவும் பிரபலமான பாதை ஹரித்வாரில் இருந்து தொடங்கி நான்கு தலங்களையும் உள்ளடக்கிய பிறகு அதே இடத்தில் முடிகிறது. இந்த புனித இடங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன – கேதார்நாத்தில் சிவன், பத்ரிநாத்தில் விஷ்ணு, கங்கோத்ரியில் கங்கை மற்றும் யமுனோத்ரியில் யமுனா தேவியை வழிபடலாம்.

மேற்குறிப்பிடப்பட்ட நான்கு புனித தலங்களுக்கான யாத்திரையை ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கானோர் மேற்கொள்கின்றனர். அதற்கு ஒவ்வொருவரும் முன்பதிவு செய்துகொள்வதும் அவசியம். அதன்படி, நடப்பாண்டு கேதார்நாத் யாத்திரைக்கான முன்பதிவு மார்ச் 2ம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.