சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தான் – வங்காளதேசம் இடையேயான போட்டி மழையால் ரத்து

ராவல்பிண்டி,

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இதில் ராவல்பிண்டியில் இன்று நடைபெற இருந்த 9-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் – வங்காளதேசம் ஆகிய அணிகள் மோதுவதாக இருந்தன. இரு அணிகளும் தங்களது முதல் 2 ஆட்டங்களில் தோல்வியடைந்து விட்டதால் ஏற்கனவே அரைஇறுதிக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்து விட்டன. எனவே இந்த போட்டி நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இவ்விரு அணிகளுக்கும் கடைசி ஆட்டமாகும். இதனை வெற்றியுடன் நிறைவு செய்ய இரு அணிகளும் முனைப்பில் இருந்தன.

இந்நிலையில் போட்டி நடைபெறும் ராவல்பிண்டி பகுதியில் பெய்த மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. மழை நின்ற பின் போட்டி நடைபெறும் என நடுவர்கள் அறிவித்து இருந்தனர். ஆனால், மழை விடாமல் தொடர்ந்து பெய்ததால், போட்டியை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. எனவே மழை காரணமாக ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்துள்ளனர். இதனால், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகளின் பயணம் இன்றுடன் முடிவுக்கு வந்தது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.